சுற்றுலா பயணிகளே உஷார்.. புதுச்சேரியில் பரவுகிறது பன்றிக்காய்ச்சல்.. 3 பேர் பலியான சோகம்
புதுச்சேரி: பன்றிக் காய்ச்சலுக்கு புதுச்சேரியில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், 24 பேருக்கு பாதிப்பு உள்ளதாகவும், அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றும் அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்தார்.
பன்றிக் காய்ச்சலால் புதுச்சேரியில் முருங்கப்பாக்கத்தைச் சேர்ந்த தயாளன் (30), பன்னித்திட்டு பகுதியைச் சேர்ந்த பானுமதி (50), பெரிய காலாப்பட்டு முருகன் (30) ஆகியோர் இறந்துள்ளனர்.
இது தொடர்பாக சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை சட்டசபை வளாகத்தில் நடைபெற்றது. சுகாதாரத் துறை அமைச்சர் மல்லாடி இதன்பிறகு நிருபர்களிடம் கூறியதாவது:
பன்றிக் காய்ச்சலால் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து, அனைத்துப் பகுதிகளிலும் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பன்றிக் காய்ச்சல் தொற்று ஏற்பட்டு 24 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில், இரண்டு பேர் மருத்துவர்கள், ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றார்.
சிகிச்சைக்கு தேவையான டாமிபுளு மாத்திரைகளை அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. மேலும், காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக அருகில் உள்ள சுகாதார நிலையம் அல்லது மருத்துவமனைக்கு வந்து தொடர் சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும். காய்ச்சல் தீவிரமாக. இருந்தால் மருத்துவர்களின் அறிவுரைப்படி பன்றிக் காய்ச்சல் சோதனை செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.