ஒரே நேரத்தில் 3 மாணவிகள் “எஸ்கேப்” - உச்சகட்ட பரபரப்பில் திருச்சி அன்னை ஆசிரமம்
திருச்சி: திருச்சி அன்னை ஆசிரமத்தில் ஓரே நேரத்தில் 3 மாணவிகள் மாயமானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருச்சி ஏர்போர்ட் பகுதியில் உள்ளது அன்னை ஆசிரமம். தமிழ்நாடு சமூக நலத்துறை மானிய உதவியுடன் இயங்கி வரும் இந்த ஆசிரமத்தில் குழந்தை தொழிலாளர்களாக இருந்து மீட்கப்பட்டவர்கள், ஆதரவற்ற குழந்தைகள், மிகவும் வறுமையில் வாடும் குடும்பத்தில் உள்ள மாணவிகள் தங்கி கல்வி பயின்று வருகின்றனர்.
இவர்கள் வளர்ந்து திருமணம் செய்து கொடுக்கும் வரையில் இந்த ஆசிரமம் தத்தெடுத்துக் கொள்ளும். இவ்வாறு 150 மாணவிகள், கைவிடப்பட்ட 55 முதியோர்கள் இங்கு அடைக்கலமாக இருந்து வருகின்றனர். இந்த ஆசிரமத்தில் கடந்த 6 ஆம் தேதி இரவு சிறப்பு பிரார்த்தனை ஒன்று நடந்துள்ளது.
இதனை தொடர்ந்து இரவு தூங்க சென்ற மாணவிகளை, வழக்கம்போல ஆசிரம நிர்வாகிகள் கணக்கெடுத்துள்ளனர். அப்போது ஆதரவற்ற நிலையில் இங்கு சேர்க்கப்பட்ட திருச்சி கொள்ளிடம் செக்போஸ்ட் பகுதியை சேர்ந்த 10 ஆம் வகுப்பு மாணவி பாண்டி மீனா, திருவாரூர் பகுதியை சேர்ந்த டெய்லரிங் மாணவி இலக்கியா, குழந்தை திருமண தடை சட்டத்தின் கீழ் திருமணத்தின் போது மீட்கப்பட்ட திருச்சி துறையூர் சேர்ந்த டெய்லரிங் மாணவி உமா ஆகிய 3 மாணவிகள் மாயமானது தெரியவந்தது. மாணவிகள் மாயமானதை தொடர்ந்து ஆசிரம நிர்வாகிகள் இது குறித்து மாணவிகளின் உறவினர்களுக்கு தகவல் அளித்து, பல்வேறு இடங்களில் தேடி வந்தனர்.
இதில் எந்தவித தகவலும் கிடைக்காததை தொடர்ந்து இன்று திருச்சி ஏர்போர்ட் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரினை தொடர்ந்து போலீசார் மாணவிகள் கடத்தப்பட்டார்களா? அல்லது காதல் காரணமாக ஓடிவிட்டார்களா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்டமாக விசாரணையில் 3 மாணவிகளும் ஆசிரமத்தின் பின் பக்க சுவற்றில் ஏறி ஓடியிருக்கிறார்கள் என்பது தெரியவந்துள்ளது.












Click it and Unblock the Notifications