திருச்சி விமான நிலைய கழிவறையில் கிடந்த ரூ. 75 லட்சம் மதிப்பு 3 கிலோ தங்க கட்டிகள்
திருச்சி: திருச்சி விமான நிலைய கழிவறையில் கேட்பாரற்றுக் கிடந்த பார்சல்களில் இருந்து 3 கிலோ தங்க கட்டிகள் மீட்கப் பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னைக்கு அடுத்தபடியாக உள்நாடு மற்றும் வெளிநாடு விமானங்கள் அதிகம் இயக்கப் படுவது திருச்சி விமான நிலையத்தில் தான். எப்போதும் பரபரப்பாகக் காணப்படும் இந்த விமான நிலையத்தில் சமீப காலமாக தங்கம் கடத்தப்படுவது அதிகரித்துள்ளது. எனவே, விமான நிலைய சுங்க அதிகாரிகள் அனைத்துப் பயணிகளையும் தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று இரவு சுமார் 11.30 மணி அளவில் விமான நிலையத்தின் உள்பகுதியில் உள்ள கழிவறையில் சில மர்ம பார்சல்கள் கிடப்பதாக துப்புறவு ஊழியர்கள் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர்.
உடனடியாக அங்கு விரைந்து சென்ற விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் மற்றும் வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் அப்பார்சலில் தங்கக் கட்டிகள் இருப்பதைக் கண்டு பிடித்தனர். மொத்தம் 3 பார்சல்களிலும் 3 கிலோ தங்கபிஸ்கட்டுகள் இருந்ததாகவும், அவற்றின் மதிப்பு ரூ.75 லட்சம் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதிகாரிகளின் சோதனைக்குப் பயந்து கடத்தல்காரர்கள் தங்கக் கட்டிகளை கழிவறையில் வீசிச் சென்றிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக விசாரணை நடத்தி வரும் அதிகாரிகள், கடத்தல்காரர்களைத் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications