சசிகலா குடும்ப நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர்கள்... அதிமுக இணைப்பில் நீடிக்கும் சிக்கல்
சசிகலா குடும்ப நிகழ்ச்சியில் அதிமுக அமைச்சர்கள் கலந்து கொண்டது அதிமுகவின் இரு அணிகள் இணைவதில் மேலும் சிக்கலை உருவாக்கியுள்ளது.
தஞ்சாவூர்: சசிகலா குடும்பத்தினரை கட்சியில் இருந்து முற்றிலுமாக நீக்கப்பட வேண்டும் என்று ஓபிஎஸ் அணியினர் வலியுறுத்தி வரும் நிலையில், தஞ்சையில் சசிகலாவின் அண்ணன் மகன் மகாதேவனின் படம் திறக்கும் நிகழ்ச்சியில் அமைச்சர்கள் 3 பேர் கலந்து கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த பிப்ரவரி முதல் அதிமுக இரு அணிகளாக பிளவு பட்டுள்ளது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலின் போது இரட்டை இலை சின்னம் கேட்டு இரு அணிகளும் மல்லுக்கட்டின.
இந்திய தேர்தல் ஆணையம் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை முடக்கி வைத்துள்ள நிலையில் அதனை மீட்க சசிகலா அணியும், ஓபிஎஸ் அணியும் இணைய வேண்டும் என்று தொண்டர்கள் விரும்பினர்.

ஓபிஎஸ் கிரீன் சிக்னல்
அணிகள் இணைய அமர்ந்து பேசுவோம் என்று ஓபிஎஸ் ஆரம்பிக்க, அதை அம்மா அணியைச் சேர்ந்த தம்பித்துரை வரவேற்க இரண்டு தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்த குழுக்களும் அமைக்கப்பட்டன.

ஓபிஎஸ் அணியின் நிபந்தனைகள்
இந்நிலையில் ஓபிஎஸ் அணியினர் முக்கியமான இரண்டு நிபந்தனைகளை விதித்துள்ளனர். சசிகலாவின் குடும்பத்தினரை கட்சியில் இருந்து நீக்க வேண்டும், ஜெயலலிதாவின் இறப்பு குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளனர்.

நீடிக்கும் இழுபறி
நிபந்தனையற்ற பேச்சுவார்த்தை என்று எடப்பாடி பழனிச்சாமி அணி தரப்பினர் கூறுகின்றனர். டிடிவி தினகரனை ஒதுக்கி விட்டதாக கூறியுள்ளனர் அமைச்சர்கள். அவரும் லஞ்ச வழக்கில் சிக்கி திகார் சிறைக்கு போய் விட்டார். அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்து சசிகலா பேனர்களை அகற்றி விட்டனர்.

தாமதமாகும் பேச்சுவார்த்தை
இரு அணிகளைச் சேர்ந்த தலைவர்கள் மாறி மாறி பேட்டி கொடுத்து வருகின்றனர். இதனால் இரண்டு தரப்பினருக்கான பேச்சுவார்த்தையில் இழுபறி நிலவுகிறது. இந்த சூழலில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மக்களின் மனநிலையை அறிய விரைவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார் என்றும், இதனாலும் பேச்சுவார்த்தை தாமதமாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

மகாதேவன் படத்திறப்பு
இதில் மேலும் ஒரு பிரச்னையாக சசிகலா குடும்ப நிகழ்ச்சி ஒன்றில் அதிமுக அமைச்சர்கள் 3 பேர் கலந்து கொண்டது மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சையில் சசிகலாவின் அண்ணன் மகன் மகாதேவனின் படம் திறக்கும் நிகழ்ச்சியில் அமைச்சர்கள் 3 பேர் கலந்து கொண்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அமைச்சர்கள் பங்கேற்பு
மகாதேவன் கடந்த 16ஆம் தேதி மாரடைப்பால் மரணமடைந்தார். இவர் டிடிவி தினகரனின் தாய் மாமா மகன். சசிகலாவின் கணவர் நடராஜன் தலைமையில் நடைபெற்ற படத்திறப்பு நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர்கள் துரைக்கண்ணு, ஓ.எஸ்.மணியன் மற்றும் காமராஜ் கலந்து கொண்டுள்ளனர். மேலும் எம்எல்ஏ ரெங்கசாமி மற்றும் கருணாஸூம் கலந்து கொண்டனர். இதனால் பேச்சுவார்த்தையில் மேலும் முட்டுக்கட்டை விழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications