எடப்பாடி பழனிச்சாமி மீது 3 கொலை வழக்குகள்.. ஈவிகேஎஸ்.இளங்கோவன் பரபர புகார்!
திமுக சார்பில் நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்தில் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கலந்துகொண்டார்.
சென்னை: சென்னையில் திமுக உண்ணாவிரதத்தில் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கலந்துகொண்டார். அப்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது 3 கொலை வழக்குகள் உள்ளன என அவர் குற்றம்சாட்டினார்.
கடந்த சனிக்கிழமை சட்டசபையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின் போது திமுகவினர் தாக்கப்பட்டு வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். இதில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் உட்பட சட்டசபை தலைவர்கள் பலரின் சட்டைகள் கிழிக்கப்பட்டன.
இதனைக் கண்டித்தும் தமிழகம் முழுவதும் திமுகவினர் இன்று உண்ணாநிலையில் ஈடுப்பட்டுள்ளனர். சென்னை வள்ளலார் நகரில் நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்தில் தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கலந்துகொண்டார்.
அப்போது பேசிய அவர் மக்களை ஏமாற்றி சொத்து சேர்த்ததால் சிறைக்கு போனவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா என்றார். மேலும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது 3 கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் ஈவிகேஎ. இளங்கோவன் குற்றம்சாட்டினார்.
அதிக குற்றம் செய்தவருக்கே அதிமுகவில் பதவி பெறுவதற்கு தகுதியாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். மேலும் அதிமுகவினரிடம் இருந்து நல்ல விஷயங்களை எதிர்பார்ப்பது முட்டாள் தனம் என்றும் ஈவிகேஎஸ்.இளங்கோவன் தெரிவித்தார்.