மின்னல் தாக்கியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி - விழுப்புரத்தில் பரிதாபம்
விழுப்புரம்: விழுப்புரத்தில் இடி தாக்கியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் தியாகதுருகத்தை சேர்ந்தவர் கணபதி, விவசாயி. இவரது மனைவி பூவாயி. நேற்று மாலை பூவாயி, அவரது மகள் இந்திராகாந்தி, பேரன் வெங்கடேசன் ஆகியோர் அவர்களுடைய நிலத்துக்கு சென்றனர். அங்கு வேலை செய்து கொண்டிருந்தபோது திடீரென இடி - மின்னலுடன் மழை பெய்யத் தொடங்கியது.
உடனே பூவாயி உள்பட 3 பேரும் அருகில் உள்ள ஒரு மரத்தடியில் ஒதுங்கி நின்றனர். அப்போது மின்னல் தாக்கியது. இதில் பூவாயி, இந்திராகாந்தி, வெங்கடேசன் ஆகிய 3 பேரும் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
இன்று காலையில்தான் இந்த துயர சம்பவம் அப்பகுதியினருக்கு தெரிய வந்தது. இறந்த 3 பேருடைய உடல்களை கண்டு உறவினர்கள் கதறி அழுதது பரிதாபத்தை ஏற்படுத்தியது. மின்னல் தாக்கி இறந்த 3 பேருடைய உடல்களையும் வரஞ்சரம் போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது பற்றி விசாரணை நடந்து வருகிறது.
ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் மின்னல் தாக்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications