தமிழகத்தில் மழை தொடர்பான விபத்துகளில் சிக்கி 2 வயது சிறுமி உட்பட 4 பேர் சாவு
சென்னை: கனமழை காரணமாக தமிழகத்தின் இருவேறு பகுதிகளில் சுவர் இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் சிறுமி உட்பட 4 பேர் பலியாகினர்.
அரியலூர் பகுதியில் நேற்று தொடர்ச்சியாக பெய்த கனமழையால், ஆர்.எஸ். மாத்தூர் அருகே உள்ள நந்தியன்குடிகாடு கிராமத்தில் ஜெகதாம்பாள் என்பவரின் வீடு இடிந்து விழுந்தது. இதில் அந்த மூதாட்டி இடிபாடுகளில் சிக்கி பலியானார்.
சென்னையை அடுத்த சிறுசேரி சிப்காட் அருகே ஏகாட்டூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் ஒஎம்ஆர் சாலை ஓரத்தில் நாவலூர்முத்து என்பவருக்கு சொந்தமான கட்டிடம் உள்ளது. அதில் இரண்டாவது மாடி கட்டுவதற்காக மதில் சுவர்கள் எழுப்பபட்டு வந்தன.
நேற்று பெய்த கனமழையால் சுவர் இடிந்து அருகில் உள்ள உணவகம் மேல் விழுந்தது. இதில் உணவக ஊழியர்கள் இருவர் உயிரிழந்தனர். இருவர் பலத்த காயத்துடன் சென்னை ராயபேட்டை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டுள்ளனர்.
தகவல் அறிந்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர், காவல்துறை துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.
இதேபோல, காஞ்சிபுரம் மாவட்டம் பனையூரில் சுவர் இடிந்து விழுந்து பவித்ரா என்ற 2 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். காயமடைந்த அவரது குடும்பத்தார் 2 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.