நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் தம்பதி உள்பட 3 பேர் தற்கொலை முயற்சி
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்த தம்பதியர் உள்ளிட்ட மூவர் தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரத்தில் முதல்நாளான திங்கட்கிழமைத்தோறும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைப்பெறுவது வழக்கம். அதன்படி இன்று காலை நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் கருணாகரன் கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் வாங்கினார்.
இந்நிலையில் மனு கொடுப்பதற்காக நெல்லை சந்திப்பு சித்தரங்கன் தெருவை சேர்ந்த தொழிலாளி மாணிக்கம், அவரது மனைவி அனிதா ஆகியோர் வந்தனர். ஆட்சியர் அலுவலக வளாகம் அருகே வந்த அவர்கள் திடீரென தாங்கள் வைத்திருந்த மண்ணெண்ணையை தலையில் ஊற்றி தீவைக்க முயன்றனர். இதனை கவனித்த போலீசார் விரைந்து சென்று 2பேரிடம் இருந்த தீப்பெட்டியை தட்டிவிட்டனர். மண்ணெண்ணெய் கேன்களை பறிமுதல் செய்தனர்.
பின்னர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது அவர்கள், எங்களது சொத்தையும், வீட்டையும் சிலர் அபகரிக்க முயல்கின்றனர். மேலும் கொலை மிரட்டலும் விடுக்கின்றனர். எனவே எங்களது உயிருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றனர்.
போலீசார் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருந்த நேரத்தில் மேலப்பாளையம் பங்காளப்பா 3ஆம் தெருவை சேர்ந்த முருகன் என்பவரும் மண்ணெண்ணையை ஊற்றி தீவைக்க முயன்றார். அவரையும் போலீசார் தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர் என்னிடம் ஒரு கும்பல் பணம் கேட்டு அடிக்கடி மிரட்டி வருகின்றனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இதையடுத்து மூவரையும் போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்றனர். மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மூவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நெல்லை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் தற்கொலை முயற்சி சம்பவங்கள் அரங்கேறி வருவதையொட்டி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. ஆனாலும் தொடர்ந்து இதுபோன்ற தற்கொலை முயற்சி சம்பவங்கள் நடப்பது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.