பிரபல ஜவுளிக்கடை குடோனில் செம்மரக் கட்டைகள் பதுக்கல்: 3 பேர் கைது
சென்னை: சென்னை புது வண்ணாரப்பேட்டையில் பிரபல ஜவுளிக் கடை கிட்டங்கியில் செம்மரக் கட்டைகள் பதுக்கி வைத்திருந்ததாக அதன் உரிமையாளர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள வீரா டெக்ஸ்டைல்ஸ்க்கு சொந்தமான ஜவுளிக் கடையின் குடோன், புதிய வண்ணாரப்பேட்டை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் உள்ளது. இந்தக் குடோனில் செம்மரக் கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீஸாருக்கு சனிக்கிழமை தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில், போலீஸார் அங்கு திடீர் சோதனை செய்தனர். இச் சோதனையில் அந்த கிட்டங்கியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒன்றரை டன் செம்மரக் கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக அந்த கிட்டங்கியின் காவலாளி தண்டையார்பேட்டையைச் சேர்ந்த நரேஷ்குமாரிடம் போலீஸார் விசாரித்தனர்.

ரூ.5 ஆயிரம் லஞ்சம்
விசாரணையில், செங்குன்றத்தைச் சேர்ந்த சுகுமார் இரு நாள்களுக்கு முன்பு அந்த செம்மரக் கட்டைகளை அங்கு வைத்துச் சென்றதாகவும், அந்தக் கட்டைகளை ஒரு வாரம் வைத்திருக்க தனக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சமாக தந்ததாகவும் அவர் தெரிவித்தாராம்.
மூன்று பேர் கைது
இதையடுத்து, புது வண்ணாரப்பேட்டை போலீஸார், அந்தக் குடோனின் உரிமையாளர் கிருஷ்ணமூர்த்தி, காவலாளி நரேஷ்குமார், அவரது நண்பர் ரவி ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
போலீஸ் விசாரணை
இந்த வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக் கட்டைகள் ஆந்திர மாநிலத்தில் இருந்து கடத்தி வரப்பட்டிருக்கலாம் என போலீஸாரால் சந்தேகிக்கப்படுகிறது. இதுதொடர்பாக தலைமறைவாக இருக்கும் சுகுமாரை கைது செய்ய போலீஸார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஜவுளிக்கடை குடோனில் செம்மரக்கட்டைகளை வைக்கப்பட்டது தொடர்பாக வீராஸ் டெக்ஸ்டைல்ஸ் கடை உரிமையாளரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தொழிலதிபர் தற்கொலை
இதனிடையே செம்மரக்கட்டை பதுக்கல் தொடர்பாக போலீசார் விசாரணை செய்த தொழிலதிபர் தற்கொலை செய்து கொண்டார். சென்னை சூளைமேடு, காமராஜர் தெருவை சேர்ந்தவர் கோபால்ராம் (வயது 65). இவருக்கு சொந்தமாக மணலி புதுநகரில் குடோன் ஒன்று உள்ளது. இந்த குடோனை டெல்லியை சேர்ந்த பிரான்சிஸ், பாஸ்கர் ஆகியோருக்கு வாடகை விட்டு இருந்தார்.
கடந்த 3-ஆம் தேதி இந்த குடோனில் மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி, அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 32 டன் செம்மரக்கட்டையை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து பிரான்சிஸ், பாஸ்கர் உள்ளிட்டோர் மீது வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில், குடோனின் உரிமையாளர் என்பதால், கோபால்ராமையும் குற்றவாளியாக சேர்த்தனர்.
தற்கொலை
இதையடுத்து, இந்த வழக்கில் கோபால்ராம், சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றார். இதற்கிடையில், கோபால்ராம் சீனாவில் இருந்து பர்னிச்சர் இறக்குமதி செய்யும் தொழில் செய்து வந்ததால், இவருக்கும் செம்மரக்கட்டை கடத்தலில் நேரடியாக தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், அவரது வீட்டை வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் சோதனை நடத்தினார்கள். இதைத்தொடர்ந்து, கோபால்ராம் தனது வீட்டின் 3-வது மாடியில் இருந்து கீழே குதித்து சனிக்கிழமையன்று தற்கொலை செய்துகொண்டார்.
இதுகுறித்து சூளைமேடு போலீசார் சந்தேகச் சாவு என்ற சட்டப்பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உறவினர்கள் புகார்
இந்த சூழ்நிலையில், கோபால்ராமின் உறவினர்கள் நேற்று சூளைமேடு போலீசில் ஒரு பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தனர். அதில், கோபால்ராம் சாவுக்கு மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகளின் துன்புறுத்தல்தான் காரணம். எனவே, அந்த அதிகாரிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
ஆனால், அப்படி புகார் எதுவும் தன்னிடம் கொடுக்கப்படவில்லை என்று சூளைமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீகாந்த் மறுத்துள்ளார். மேலும், கோபால்ராம் சாவு குறித்து தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும், பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னர்தான் கோபால்ராம் சாவின் விவரம் தெரியவரும் என்றும் அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications