தனியாக செல்வோரிடம் வழிப்பறி... கோவையில் இரு சிறுவர்கள் உள்பட 3 பேர் கைது
கோவை: கோவை அருகே வழிப்பறியில் ஈடுபட்டு வந்த இரண்டு சிறுவர்கள் உட்பட மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவை, புலியகுளம் அருகே உள்ள ஏரிமேடு அம்மன்குளம் பகுதியைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி நாகராஜ் (30). இவர், மே 30-ம் தேதி இரவு வேலை முடிந்து மதுரை வீரன் கோயில் வழியாக வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த மூன்று பேர், நாகராஜைத் தாக்கி அவரிடமிருந்த ரூ. 2 ஆயிரத்தைப் பறித்துச் சென்றனர். இது தொடர்பாக நாகராஜ் போலீசில் புகார் அளித்தார். போலீசாரும் வழிப்பறியில் ஈடுபட்ட நபர்களைத் தேடி வந்தனர்.
இந்நிலையில், மே 31ம் தேதி இரவு ரோந்துப் பணியில் இருந்த போலீசார், கல்லறைத் தோட்டம் பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் சுற்றித் திருந்த மூன்று பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். கைது செய்யப் பட்டவர்களில் இரண்டு பேர் 14 வயதுக்குட்பட்ட சிறுவர்கள்.
தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், நாகராஜிடம் பணம் திருடியதை அவர்கள் ஒப்புக் கொண்டனர். மேலும், பள்ளிக்கு செல்லாமல் கோவை நகரின் பல்வேறு இடங்களுக்குச் சென்று தனியாக நடந்து செல்வோரிடம், அம்மூவரும் அடிக்கடி வழிப்பறிச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, மூவரையும் கைது செய்த போலீசார், இரண்டு சிறுவர்களையும் அரசு கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பி வைத்தனர். அவர்களுடன் இருந்த பிரகாஷ் என்ற 23 வயது இளைஞரை கோவை நடுவன் சிறையில் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications