பிறந்தநாள் கொண்டாடிய போது சோகம்.. கல்குவாரி குட்டையில் மூழ்கி 3 கல்லூரி மாணவர்கள் பலி
காட்பாடியில் உள்ள கல்குவாரி குட்டையில் மூழ்கி கல்லூரி மாணவர்கள் 3 பேர் பலியாகி உள்ளனர். இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர்: வேலூர், காட்பாடி வி.ஐ.டி.பல்கலைக் கழகம் பின்புறம் உள்ள குட்டையில் மூழ்கி 3 மாணவர்கள் பரிதாபமாக பலியாகினர். பிறந்த நாள் கொண்டாடச் சென்ற போது இந்த சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.
வேலூர் மாவட்டம் காட்பாடி வி.ஐ.டி.பல்கலைக் கழகத்தில் படித்து வந்த அரிக்குமார், பிரவீன், சித்தார்த் மற்றும் பிரீத் ஆகிய 4 மாணவர்கள் பிறந்தநாள் கொண்டாடுவதற்காக ஈசன் ஓடை பகுதியில் அமைந்துள்ள கல்குவாரி குட்டை பகுதிக்கு சென்றனர்.

அங்கு கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியுள்ளனர். அப்போது முகத்தில் கேக் பூசியதால் அதை கழுவச் சென்ற மாணவர் எதிர்பாரதவிதமாக தவறி தண்ணீரில் மூழ்கியுள்ளார். அவரை காப்பாற்ற முயன்ற மற்ற 2 மாணவர்களும் தண்ணீரில் குதித்துள்ளனர். இந்நிலையில் மூவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

பின்னர் தகவல் அறிந்து வந்த காட்பாடி தீயணைப்பு துறையினர் மற்றும் காவல் துறையினர் 1 மணி நேர தேடுதல் வேட்டைக்கு பிறகு 3 பேரின் சடலத்தையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் சம்பவத்தின் போது உடன் இருந்த மேல்விஷாரம் பகுதியைச் சேர்ந்த மற்றோரு மாணவன் பீரீத்தை காட்பாடி காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications