எந்தாடா இது கொடுமை.. இலையில் கட்டி 3 மணி நேரம் தூக்கி செல்லப்பட்ட "குட்டி கிருஷ்ணா"!
கண்ணூர்: கேரளாவின் கண்ணூர் நகரில் நடந்த கிருஷ்ணர் ஊர்வலத்தின்போது குட்டிப் பையன் ஒருவனை இலையில் வைத்துக் கட்டி பல மணி நேரம் ஊர்வலமாக கொண்ட செயல் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து தற்போது கேரள மாநில சிறார் உரிமை பாதுகாப்பு கமிஷன் வழக்குப் பதிவு செய்துள்ளது. ஸ்ரீகாந்த் உஷா பிரபாகரன் என்பவர் இதுதொடர்பாக புகைப்படம் ஒன்றை தனது பேஸ்புக்கில் போட்டிருந்தார். அது வைரலாகப் பரவியதைத் தொடர்ந்து தற்போது வழக்குப் பாய்ந்துள்ளது.
பையனூர் பகுதியில் இந்தசம்பவம் நடந்துள்ளது. அப்பகுதியில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி சிறார்களை கிருஷ்ணர் வேடமிட்டு ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். அப்போது ஒரு 3 வயது சிறுவனை பெரிய வெற்றிலையில் கட்டி வைத்து தூக்கிய வாக்கில் குட்டி ஆட்டோவில் வைத்து கூட்டி வந்தனர்.
மக்கள் அதிர்ச்சி
இதைப் பார்த்து பலரும் அதிர்ச்சி அடைந்தனர். அந்த சிறுவனுக்கு நடப்பது எதுவுமே புரியவில்லை. ஆனால் குழந்தையை இப்படி கட்டி வைத்து தூக்க வந்ததைப் பார்த்த ஸ்ரீகாந்த் பதறிப் போனார். உடனே ஊர்வலம் நடத்தியவர்களிடம் சென்று முதலில் குழந்தையை அவிழ்த்து விடுமாறு கேட்டார். ஆனால் அவர்கள் மறுத்து விட்டனர்.
போட்டோ போட்ட ஸ்ரீகாந்த்
இதையடுத்து தனது பேஸ்புக்கில் இதைப் புகைப்படமாக எடுத்துப் போட்டார். அதற்கு நல்ல பலன் கிடைத்தது. புகைப்படத்தைப் பார்த்த கேரள மாநில சிறார் பாதுகாப்பு கமிஷன் அதிகாரிகள் உடனடியாக இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டனர்.
வழக்குப் பதிவு
இந்த சம்பவம் தொடர்பாக 2 வாரத்திற்குள் விளக்கம் அளிக்குமாறு மாநில உள்துறை செயலாளர், மாநில போலீஸ் டிஜிபி, மாவட்ட கலெக்டர், மாவட்ட எஸ்பி ஆகியோருக்கு கமிஷன் உத்தரவிட்டுள்ளது
விவேகானந்தர் சேவா சமிதி
விவேகானந்தர் சேவா சமிதி என்ற அமைப்புதான் இந்த ஊர்வலத்தை நடத்தியது. கிட்டத்தட்ட 3 மணி நேரம் அந்த சிறுவனை கட்டி வைத்த நிலையில் தூக்கிச் சென்றுள்ளனர்.