சென்னை ஆவடியைக் கதிகலங்க வைத்த 3 வழிப்பறி கொள்ளையர்கள் கைது
சென்னை: சென்னை ஆவடி அருகே வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். ஆவடி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் பெண்களிடம் வழிப்பறி செய்வது மற்றும் வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளையடிப்பது போன்ற சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்து வந்தன.
இதையடுத்து போலீஸ் துணை கமிஷனர் மயில்வாகனன் உத்தரவின் பேரில் ஆவடி சரக போலீஸ் உதவி கமிஷனர் கெங்கைராஜ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கொள்ளையர்களை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்தநிலையில் நேற்று காலை ஆவடி அடுத்த பூம்பொழில் நகர் அருகே ஆவடி டேங்க் பேக்டரி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் காந்தி மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்களை சந்தேகத்தின்பேரில் போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் அவர்கள் திருமுல்லைவாயல் தென்றல் நகரைச் சேர்ந்த யுவராஜ் ராமநாதபுரம் மாவட்டம் பனைகுளம் அடுத்த புதுவலசை பகுதியைச் சேர்ந்த செல்வக்குமார் என்ற அப்துல்லா, சென்னை கொரட்டூர் சாரதா நகரைச் சேர்ந்த கணேஷ் என்பது தெரிந்தது. இவர்கள் ஆவடி, திருமுல்லைவாயல், கோவில்பதாகை உள்ளிட்ட பகுதிகளில் பெண்களிடம் வழிப்பறி செய்வது மற்றும் வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளையடித்ததும் தெரியவந்தது.
மேலும், இவர்கள் மோட்டார் சைக்கிள்களையும் திருடி உள்ளனர். இவர்களில் யுவராஜ், மற்றும் அப்துல்லா மீது அண்ணாநகர், மாதவரம் ஆகிய போலீஸ் நிலையங்களில் ஏற்கனவே குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும், அப்துல்லா ஏற்கனவே குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டவர்.
இதையடுத்து நேற்று மாலை 3 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களை அம்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் ஜெயிலில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து 23 சவரன் நகை மற்றும் 2 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.