அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 350 காளைகள் பங்குபெறும் - மதுரை ஆட்சியர்
மதுரை: அலங்காநல்லூரில் நாளை நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டியில் 350 காளைகள் பங்குபெறும் என்று மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் அறிவித்துள்ளார்.
ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு வகை செய்யும் அவசர சட்டத்தை தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசகர் ராவ் இன்று பிறப்பித்தார். இதையடுத்து அலங்காநல்லூர் உள்ளிட்ட பல இடங்களில் நாளை ஜல்லிக்கட்டு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டு நடத்த நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டம் வலுத்து வருகிறது. இதனால், ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசே அவசரச்சட்டத்தை இயற்றியுள்ளது. இதனை தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் அவசரச்சட்டத்தை பிறப்பித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதனையடுத்து, மதுரையின் அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு ஆகிய இடங்கிளல் நாளை ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது.
இந்நிலையில், மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ், அலங்காநல்லூரில் நாளை நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டியில் 350 காளைகள் பங்குபெறும் என்று கூறியுள்ளார். மேலும், 15 சார் ஆட்சியர்களும், 10 வட்டாட்சியர்களும் ஜல்லிக்கட்டு பணியில் ஈடுபடுத்தப்படுவர் என்றும் அவர் கூறினார். பார்வையாளர்கள் வந்துசெல்ல சிறப்பு பேருந்து வசதி செய்யப்படும், போட்டி நடைபெறும் இடத்தில் போதிய மருத்துவ வசதிக்கு ஏற்பாடு செய்யப்படும் என்றும் வீரராகவ ராவ் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications