4 தீவிரவாதிகளை டிசம்பர் 1க்குள் பெங்களூரு என்.ஐ.ஏ கோர்ட்டில் ஆஜர்படுத்த மேலூர் கோர்ட் உத்தரவு
மதுரையில் கைது செய்யப்பட்ட அல்கொய்தா அடிப்படைவாத அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் நால்வரை மேலூர் நீதிமன்றத்தில் என்ஐஏ அமைப்பினர் இன்று ஆஜர்படுத்தினர்
மதுரை: மைசூர் குண்டுவெடிப்பு சம்பவம் மற்றும் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய 4 பேர் மதுரையிலும் ஒருவர் சென்னையிலும் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் தேசிய புலனாய்வுப்படையினர் நடத்திய விசாரணையில் மேலும் பரபரப்பான தகவல்கள் வெளியாகின.
டெல்லி தேசிய புலனாய்வுப்பிரிவு போலீசாரின் 13 தனிப்படையினர் நவம்பர் 27 முதல் மதுரையில் முகாமிட்டு கண்காணிப்பு மற்றும் விசாரணையை வேகப்படுத்தினர். டெல்லி, சென்னை, ஆந்திரா, கேரளாவைச் சேர்ந்த தேசிய புலனாய்வுப்பிரிவு அதிகாரிகள் மதுரையில் முகாமிட்டு அல்கொய்தா அடிப்படைவாத அமைப்பினரை கைது செய்தனர் என்று போலீசார் தெரிவித்தனர்.
மூளைச்சலவையால் மதுரை இளைஞர்கள் தீவிரவாத செயலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். சென்னையில் கைதானவரும் மதுரையை சேர்ந்த இளைஞர்தான். தீவிரவாத செயல்களுக்கான செலவினங்களுக்கு பல கோடி ரூபாய் பணம் மதுரைக்கு கொண்டு வந்து குவிக்கப்பட்டிருக்கிறது.
பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை மதுரையை மையமாக வைத்து கும்பல் ரூ.25 கோடி வரை இளைஞர்களின் வங்கிக்கணக்குகள் மூலம் புதிய நோட்டுகளாக மாற்றிச் சென்றுள்ளனர். இந்த பணத்தை மாற்றித்தர தீவிரவாதக் கும்பல், 30 சதவீத கமிஷன் கொடுத்திருப்பதும் தெரிய வந்துள்ளது.
வங்கிக்கணக்குகள் மூலம் பணம் மாற்றியவர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன்பேரிலும் விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலம் தீவிரவாத தொடர்புடைய மேலும் சிலர் சிக்குவர் என்பது தெரியவந்துள்ளது.
இதுதவிர கைதான அப்பாஸ் அலி மற்றும் 2 பேரிடமும் அல்கொய்தா தொடர்புடன், பிரதமர் உள்ளிட்ட 22 முக்கிய தலைவர்களை கொல்ல திட்டமிட்டிருப்பது குறித்த விசாரணையை வேகப்படுத்தியுள்ளோம். விசாரணை முடிவில், மிகப்பெரிய சதித்திட்டம் குறித்த விபரங்கள் வெளிவரும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.
மதுரையில் நேற்று கைது செய்யப்பட்ட அப்பாஸ் அலி, கரீம் ராஜா, சம்சுதின் உள்ளிட்ட 4 பேர் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் மைசூர் மற்றும் மலப்புரம் நீதிமன்ற வளாகத்தில் வெடிகுண்டு வைத்ததாக சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது 15 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலூர் நீதிமன்ற நீதிபதி செல்வகுமார் இவர்களிடம் விசாரணை நடத்தினார்.
அப்போது அவர்கள், என்ஐஏ அமைப்பினர் தங்களை தாக்கி காயப்படுத்தியதாக தெரிவித்தனர். அதற்கு என்ஐஏ அமைப்பைப் சேர்ந்த வழக்கறிஞர் மறுத்தார். விசாரணைக்குப் பின்னர் மதுரையில் பிடிபட்ட 4 தீவிரவாதிகளை டிசம்பர் 1க்குள் பெங்களூரு என்.ஐ.ஏ கோர்ட்டில் ஆஜர்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. 4 தீவிரவாதிகளையும் பெங்களூரு கொண்டுசெல்ல மேலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.