போலி நம்பர் பிளேட் பொருத்திய வாகனங்களில் வந்த 4 பேர் கைது
மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் போலி நம்பர் பிளேட்டுடன் வாகனங்களை ஓட்டி வந்ததாக நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து மூன்று கார்கள் கைப்பற்றப்பட்டன.
சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கடந்த செப்டம்பர் 1ம் தேதி முதல் 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. குரு பூஜை, நினைவு தினத்திற்கு வருபவர்கள் வாடகை வாகனங்களில் வரக் கூடாது, மூன்று வாகனங்களுக்கு மேல் செல்லக்கூடாது என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தன.
அதனையும் மீறி தலித் தலைவர்களான ஜான்பாண்டியன் மற்றும் கிருஷ்ணசாமியுடன் 40க்கும் மேற்பட்ட வாகனங்களில் வந்தனர். அனைத்து வாகனங்களும் சோதனைசாவடியில் டிரைவர்களுடன் படம் எடுத்து பதிவு செய்தனர்.
பின்னர் அவற்றை சரி பார்க்கையில் வாடகை வாகனங்களள சொந்த வாகனம் போல பதிவு எண்ணை மாற்று கொண்டு வந்திருப்பது தெரியவந்தது. இதுகுறித்து மானாமதுரை சோதனை சாவடியில் பாதுகாப்பு பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் 14 வாகனங்கள்,உரிமையாளர்கள், ஓட்டுனர்கள் மீது வழக்குப்பதிவு செய்திருந்தனர்.
ஞாயிற்றுக்கிழமையன்று கருர் மற்றும் கோவை மாவட்டங்களை சேர்ந்த மூன்று கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதன் உரிமையாளர்கள் யுவராஜா, ஹேமந்த்குமார் மற்றும் ஓட்டுனர்கள் தமிழ்வாணன், கணேஷ்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது ஜாமீனில் வெளிவராத பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை மற்றும் கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த வாகனங்களைத்தான் அதிகளவு எடுத்து வந்துள்ளனர். தற்போது இவர்கள் மீது ஜாமீனில் வெளி வர முடியாத பிரிவுகளின் மீது வழக்குப்பதிவு செய்திருப்பதால் இவர்கள் பெரும் செலவு செய்துதான் வழக்கில் இருந்து ஜாமீனில் வெளிவர முடியும்.
இதன் மூலம் அடுத்து மருதுபாண்டியர், தேவர் குரு பூஜைக்கு யாரும் இதுபோல திருட்டுத்தனமாக வாகனங்களை கொண்டு வர முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.