பெண்களே, யாராவது சில்மிஷம் செய்தால் இதை, இதை செய்யுங்க!
சென்னை: வெளியே செல்லும் பெண்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள சில விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
செய்தித்தாளை எடுத்தால் இளம்பெண் பலாத்காரம், சிறுமியிடம் சில்மிஷம் என்று இது போன்ற செய்திகள் தான் அதிகம் வருகின்றன. பெண்களால் நிம்மதியாக வெளியே சென்று வீடு திரும்ப முடியவில்லை. ஆண்களின் தொல்லை தாங்க முடியவில்லை என்று பயந்து பெண்கள் வீட்டுக்குள் முடங்கிவிடக் கூடாது.
பிறர் கூறுவது போன்று நீங்கள் ஒன்றும் வலுவில்லாதவர்கள் கிடையாது. உங்களை பாதுகாத்துக் கொள்ளும் சக்தி உங்களுக்கு உள்ளது என்று முதலில் நீங்கள் நம்ப வேண்டும். வெளியே செல்லும் பெண்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள சில டிப்ஸ் இதோ,
கவனம்
வெளியே செல்கையில் காதில் ஹெட்செட் போட்டு பாட்டுக் கேட்டுக் கொண்டோ, செல்போனில் பேசிக் கொண்டோ செல்லாதீர்கள். உங்களை சுற்றி என்ன நடக்கிறது என்பதில் கவனமாக இருங்கள்.
பெப்பர் ஸ்ப்ரே
எப்பொழுதும் கைப்பையில் பெப்பர் ஸ்ப்ரே மற்றும் குட்டி கத்தியை வைத்துக் கொள்ளுங்கள். யாராவது உங்களிடம் வம்பிழுத்தால் பெப்பர் ஸ்ப்ரே அல்லது கத்தியை பயன்படுத்துங்கள்.
சப்தம் போடுங்கள்
சாலையில் உங்களை யாராவது சீண்டினால் பயத்தில் வாயடைத்துவிடாமல் உதவி கேட்டு சப்தம் போடுங்கள். நிச்சயம் உதவி கிடைக்கும்.
தன் கையே தனக்கு உதவி
உங்களிடம் வம்பிழுக்கும் ஆண்களின் கண்களை உங்கள் விரல்களால் குத்துங்கள். அல்லது அவனது தொண்டையில் ஓங்கிக் குத்துங்கள், அவனது மர்ம உறுப்பில் எட்டி உதையுங்கள் நிலை குலைந்துவிடுவான்.