சென்னையில் கல்லூரி மாணவர்கள் மோதல்: பஸ்கண்ணாடி உடைப்பு– 4 பேர் கைது
சென்னை: சென்னை புரசைவாக்கத்தில் மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் பேருந்து கண்ணாடி உடைந்தது. மோதலில் ஈடுபட்ட மாணவர்களில் நான்கு பேரை கைது செய்த போலீசார், அதில் தொடர்புடைய 10க்கும் மேற்பட்ட மாணவர்களை தேடி வருகின்றனர்.
திருவேற்காடு - பெரம்பூர் செல்லும் வழித்தடம் எண், '29 இ' மாநகர பேருந்தில், பச்சையப்பன் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள், நேற்று முன்தினம் மாலை, 4:00 மணியளவில் பயணம் செய்தனர்.
கீழ்ப்பாக்கம் கெல்லீஸ் சாலையில், பேருந்து சென்றபோது, அங்கு நின்றிருந்த, 20க்கும் மேற்பட்ட மாநில கல்லூரி மாணவர்கள் அந்த பேருந்தை நோக்கி கல்வீசி தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பேருந்தின் உள்ளே மற்றும் படிக்கட்டில் பயணம் செய்த மாணவர்களுக்கும் காயம் ஏற்பட்டது. பின்னர் மாணவர்கள் மோதலில் ஈடுபட்டனர். ஒருவருக்கொருவர் கற்களை வீசி தாக்கினர்.
அதில் பேருந்து கண்ணாடி உடைந்தது. பயணிகள் அலறி ஓடினர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற கீழ்ப்பாக்கம் போலீசார் லேசான தடியடி நடத்தி, மாணவர்களை கலைத்தனர். இந்த சம்பவம் குறித்து, பச்சையப்பன் கல்லூரியில், பி.ஏ., இரண்டாம் ஆண்டு படிக்கும் அரிஷ்குமார், 22, பி.பி.எம்., இரண்டாம் ஆண்டு படிக்கும் வேலியப்பன், 20, பி.எஸ்சி., இரண்டாம் ஆண்டு படிக்கும் 18 வயது மாணவர் மற்றும் மாநில கல்லூரியில் பி.எஸ்சி., முதலாம் ஆண்டு படிக்கும் 18 வயது மாணவர் ஆகிய நான்கு பேரை, கீழ்ப்பாக்கம் போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
மேலும், மோதலில் ஈடுபட்ட 10க்கும் மேற்பட்ட மாணவர்களை அடையாளம் கண்டுள்ளதாகவும் அவர்களும் விரைவில் கைது செய்யப்படுவர் எனவும், போலீசார் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications