கிணற்றில் விழுந்த ஆட்டை மீட்கச் சென்ற 4 பேர் விஷ வாயு தாக்கி பலி
புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே கிணற்றுக்குள் விழுந்த ஆட்டை காப்பாற்றச் சென்று கிணற்றில் இறங்கிய, 4 பேர் விஷவாயு தாக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகேயுள்ள துவார் கிராமத்தைச் சேர்ந்த சவுந்திரராஜன் என்பவர், குடிநீர் தேவைக்காக தனது வீட்டின் அருகே கிணறு வெட்டியிருக்கிறார். இந்த கிணற்றுக்குள் கோவிலுக்கு நேர்ச்சையாக விடப்பட்ட ஆடு ஒன்று தவறிவிழுந்தது.

அந்த ஆட்டை காப்பாற்றுவதற்காக அதே கிராமத்தைச் சேர்ந்த அய்யாவு என்பவர் கயிறு கட்டி கிணற்றுக்குள் இறங்கியிருக்கிறார். கிணற்றுக்குள் அவரை விஷவாயு தாக்கியிருக்கிறது. இதனால், அவர் மூச்சு திணறல் ஏற்பட்டு தடுமாறினார்.
அய்யாவுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதை அறிந்து, அவரை மீட்பதற்காக ரங்கசாமி மற்றும் பரமையா ஆகியோர் அடுத்தடுத்து இறங்கியிருக்கின்றனர். அவர்களுக்கும் மூச்சு திணறல் ஏற்பட்டிருக்கிறது.
இதைப் பார்த்த சவுந்திரராஜன் அடுத்ததாக இறங்கியிருக்கிறார். அப்போது கயிறு அறுந்து, அவர் கிணற்றுக்குள் விழுந்திருக்கிறார். சற்று நேரத்தில் நான்கு பேரும் விஷவாயு தாக்கி, மூச்சுத் திணறி உயிரிழந்தனர்.
அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் இதுகுறித்து காவல்துறையினர், தீயணைப்பு படையினருக்கு தகவல் அளித்தனர். நீண்ட நேர போட்டத்திற்கு பிறகு, 4 பேரின் உடல்களையும் மீட்டு, ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இவர்களை மீட்க முயன்ற தீயணைப்பு வீரர்களில் சிலரும் விஷ வாயுவால் மயக்கமடைந்தனர்.
கிணற்றில் விழுந்த ஆட்டை மீட்கச் சென்று ஒரே கிராமத்தைச் சேர்ந்த 4 பேர் விஷவாயு தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications