பார்ர்ரா.. மதுசூதனனுக்கு ஆதரவாக "யு டர்ன்" போட்டு களம் குதித்த 4 சுயேச்சை வேட்பாளர்கள்...!
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலுக்கு இன்னும் மூன்றே நாள் இருக்கும் நிலையில் ஓபிஎஸ் அணியை ஆதரித்து 4 சுயேச்சை வேட்பாளர்கள் களத்தில் குதித்துள்ளனர். இதனால் ஓபிஎஸ் அணி மேலும் களைகட்டியுள்ளது.
சென்னை: ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தல் வரும் 12ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக திமுக, அதிமுக அம்மா, அதிமுக புரட்சித் தலைவி அம்மா, சிபிஎம், பாஜக, தீபா பேரவை என பல்வேறு கட்சிகள் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
தினமும் ஒரு குற்றச்சாட்டு பதிலுக்கு இன்னொரு குற்றச்சாட்டு என பிரிந்துள்ள அதிமுக அணிகளுக்குள் கடும் போர் நடந்து வரும் நிலையில், தினகரன் அணியினர் பணத்தை பட்டுவாடா செய்வதில் மும்முரமாகவே ஈடுப்பட்டு வருகின்றனர். அதே போன்று ஓபிஎஸ் அணியின் சார்பிலும் பணப்பட்டுவாடா நடைபெறுவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் அதிமுக புரட்சித்தலைவி அம்மா கட்சி வேட்பாளர் மதுசூதனனுக்கு 4 சுயேட்சை வேட்பாளர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். சுயேச்சை வேட்பாளர்கள் கணேசன், ரேணுகாதேவி, பத்மராஜன், மஞ்சுளா ரவிகுமார் ஆகிய நான்கு பேரும் ஆதரவு தெரிவித்துள்ளதால் ஓபிஎஸ் அணி மேலும் உற்சாகம் அடைந்துள்ளது.
இவர்கள் வெறும் ஆதரவினை மட்டும் தெரிவிக்காமல் , தொகுதியில் மதுசூதனன் மேற்கொள்ளும் பிரச்சாரத்திலும் கலந்து கொள்கின்றனர். நேற்று ஆர்.கே.நகர் தொகுதி 47-வது வட்டத்தில் முன்னாள் அமைச்சர் மா.பா. பாண்டிராஜனுடன் இணைந்து கணேசன் தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.
மற்ற மூவரும் மதுசூதனனுக்கு ஆதரவு கேட்டு வீதி, வீதியாகச் சென்று ஓட்டு வேட்டையில் ஈடுபட்டனர். அதே போன்று தேர்தல் அறிக்கையில் இடம் பெற்ற முக்கிய அம்சங்கள் மற்றும் தொகுதியில் நிறைவேற்றவிருக்கும் திட்டங்கள் குறித்தும் வாக்காளர்களிடையே சுயேச்சை வேட்பாளர்கள் பிரச்சாரம் செய்தனர்.