புதுச்சேரி வினோதினி தற்கொலை: 4 பேராசிரியர்கள் கைது
புதுச்சேரி: புதுச்சேரியில் கல்லூரி வளாகத்தில் மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் பேராசிரியர்கள் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புதுச்சேரி சுல்தான் பேட்டையைச் சேர்ந்த இளங்கோவன் என்பவரது மகள் வினோதினி, மதகப்பட்டியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார்.
தேர்வில் மதிப்பெண் குறைவாக எடுத்த வினோதினியை பிற மாணவர்கள் முன்னிலையில் பேராசிரியர்கள், திட்டியதாக கூறப்படுகிறது. அதனால், மனமுடைந்த அவர் நேற்று திங்கட்கிழமை கல்லூரியின் 4வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
மாணவி தற்கொலை சம்பவம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று ஆயிரக்கணக்கான மாணவர்களுடன், பெற்றோர்களும், மாணவியின் உறவினர்களும் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். மேலும் துணை நிலை ஆளுநர் வீரேந்திர கட்டாரியாவைச் சந்தித்து, மாணவியின் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இதன் எதிரொலியாக, ஐந்து பேராசிரியர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், தற்போது 4 பேராசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தவளக்குப்பம் காவல்நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட பேராசிரியர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications