சென்னை சென்ட்ரலில் 4 வயது சிறுவனை கடத்திய பெண்ணின் உருவம் கேமராவில் பதிவு: ஆனால்...
சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மாயமான 4 வயது தூத்துக்குடி சிறுவனை கடத்திய பெண்ணின் உருவம் கேமராவில் பதிவாகியுள்ளது.
தூத்துக்குடி முத்தையாபுரத்தைச் சேர்ந்தவர் முருகமுத்து(36). கட்டிடத் தொழிலாளி. அவரின் மனைவி ரதி. அவர்கள் தங்களின் மூன்று மகன்களை அழைத்துக் கொண்டு சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள உறவினர் வீட்டுக்கு செல்ல ரயிலில் எழும்பூர் வந்தனர். மின்சார ரயிலில் வண்ணாரப்பேட்டை செல்ல அவர்கள் சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையத்திற்கு வந்தனர்.
அங்கு ரயிலுக்காக காத்திருக்கையில் முத்துவின் மூன்றாவது மகன் ஸ்ரீதர்(4) மாயமானார். சிறுவனை தேடியும் கிடைக்காததால் முத்து இது குறித்து ரயில்வே போலீசாரிடம் புகார் தெரிவித்தார்.
புறநகர் ரயில் நிலையத்தில் மொத்தம் 6 கேமராக்கள் உள்ளன. அதில் 11வது பிளாட்பாரத்தில் இருந்து நெல்லூர் செல்லும் ரயிலில் ஏறிய பெண் ஒருவர் இடுப்பில் ஒரு குழந்தையும், கையில் ஒரு சிறுவனையும் வைத்துக் கொண்டு ஏறியது கேமராவில் பதிவாகியுள்ளது. ஆனால் கேமராவில் பதிவானது தெளிவாக இல்லை என்பதால் போலீசாரால் எந்த முடிவுக்கும் வர முடியவில்லை. இருப்பினும் சென்ட்ரல் முதல் நெல்லூர் வரை உள்ள ரயில் நிலையங்களுக்கு சிறுவன் குறித்த தகவல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
முன்பு கடந்த மார்ச் மாதம் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து பச்சிளம் குழந்தை திருடப்பட்டது. குழந்தையை திருடிய பெண்ணின் உருவம் கேமராவில் தெளிவாகப் பதிவாகவில்லை. அந்த குழந்தை இன்னும் கண்டுபிடிக்காமல் உள்ள நிலையில் சிறுவன் மாயமாகியுள்ளார்.