சென்னை சென்ட்ரல் அருகே கோவை சதாப்தி ரயிலின் 5 பெட்டிகள் தடம் புரண்டன! பயணிகள் பெரும் அவதி!!
சென்னை: சென்னை சென்ட்ரல் அருகே பணிமனையில் இருந்து ரயில் நிலையத்துக்கு வந்து கொண்டிருந்த கோவை சதாப்தி ரயிலின் 5 பெட்டிகள் தடம் புரண்டன. இதனால் கோவை செல்ல வேண்டிய பயணிகள் 3 மணிநேரம் பெரும் அவதிக்குள்ளாகினர்.
சென்ட்ரலில் இருந்து காலை 7.15 மணிக்கு கோவைக்கு சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டு செல்லும். முற்றிலும் ஏ.சி.சேர் வசதி கொண்ட இந்த ரயிலில் பயணிகளுக்கு காலை டிபன், மதியம் சாப்பாடு போன்றவை வழங்கப்படும்.

சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களில் மட்டும் சதாப்தி எக்ஸ்பிரஸ் நின்று செல்லும். சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகள் காலை 6.15 மணியளவில் பணிமனையில் இருந்து சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டன.
அப்போது பேசின் பிரிட்ஜ் அருகே அந்த ரயில் வரும்போது அதன் 5 பெட்டிகள் திடீரென தடம் புரண்டன. ரயில் பெட்டிகளில் பயணிகள் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இந்த விபத்துக்கான தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரயில்வே ஊழியர்கள் தடம் புரண்ட ரயில் பெட்டிகளை சரி செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
சதாப்தி எக்ஸ்பிரஸ் தடம் புரண்ட தகவல் பயணிகளுக்கு தாமதமாக தெரிவிக்கப்பட்டதால் அவர்கள் ஆவேசம் அடைந்தனர். ரயிலில் பயணம் செய்ய காத்திருந்த 500-க்கும் மேற்பட்ட பயணிகள் ரயில்வே அதிகாரிகளிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
ரயில் எத்தனை மணிக்கு புறப்படும், என்ன ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பது போன்ற எந்த தகவலும் கிடைக்காமல் சிறிது நேரம் பயணிகள் தவித்தனர்.
நீண்ட நேரத்திற்கு பிறகு அறிவிப்பு வெளியிடப்பட்டது. சதாப்தி எக்ஸ்பிரஸ் தடம் புரண்டதால் தாமதமாக காலை 10.30 மணிக்கு புறப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் முன்பதிவு செய்த பயணிகள் 3 மணி நேரம் பெரும் சிரமத்திற்கு ஆளானார்கள். பின்னர் 10.30 மணிக்கு கோவைக்கு சதாப்தி ரயில் புறப்பட்டுச் சென்றது.
மீண்டும் மீண்டும்..
கடந்த 17-ந் தேதி அதிகாலை 4.30 மணியளவில் பெங்களூரில் இருந்து சென்னை சென்ட்ரல் வந்த சென்னை எக்ஸ்பிரஸ் ரயிலின் பெட்டிகள் பேசின் பிரிட்ஜ் ரயில் நிலையம் அருகே வந்த போது தடம்புரண்டன. இந்நிலையில், இன்று மீண்டும் கோவை சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகள் தடம் புரண்டுள்ளது பயணிகள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications