நெருங்குகிறது டிச.30... நீடிக்கிறது பணத்தட்டுப்பாடு... தளருமா கட்டுப்பாடுகள்?
நாடு முழுவதும் வங்கிகளில் பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகள் தொடருகிறது. இதனால் பணத்தட்டுப்பாடு என்பது மேலும் சில மாதங்களுக்கு நீடிக்க வாய்ப்புள்ளதாகவே கூறப்படுகிறது.
சென்னை: ரூபாய் நோட்டு செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்பால் நாடு முழுவதும் பணத்தட்டுப்பாடு பொதுமக்களை பாடாய்படுத்தி வருகிறது. பிரதமர் மோடி அறிவித்த 50 நாட்கள் கெடு முடிவடைய 5 நாட்களே உள்ள நிலையில் பணத்தட்டுப்பாடு தொடர் கதையாகத்தான் இருக்கிறது. வங்கிகளில் பணம் எடுப்பதற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் மேலும் சில மாதங்களுக்கு நீடிக்கவே வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என நவம்பர் 8-ந் தேதி பிரதமர் மோடி அதிரடியாக அறிவித்தார். அத்துடன் வங்கிகளில் பணம் எடுப்பதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

ஒரு வாரத்துக்கு ரூ24,000 மட்டுமே ஒருவர் எடுக்க முடியும் என அறிவிக்கப்பட்டது. ஏடிஎம் மையங்களிலும் ரூ2,000 மட்டுமே கிடைக்கும் எனவும் அறிவிக்கபட்டது.
இதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் பெரும்பாலான ஏடிஎம் மையங்கள் மூடப்பட்டன. திறந்துகிடக்கும் ஏடிஎம் மையங்களில் மக்கள் ரூ2,000 எடுப்பதற்காக நீண்ட கியூ வரிசைகளில் காத்துகிடக்கும் அவலம் தொடர் கதையாகிறது.
டிசம்பர் 30-ந் தேதிக்குள் நிலைமை சீராகிவிடும் என பிரதமர் மோடி அறிவித்து வருகிறார். ஆனால் டிசம்பர் 30-ந் தேதிக்கு இன்னும் சில நாட்களே உள்ளன. வங்கிகளில் பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகள் தொடருகிறது; ஏடிஎம் மையங்கள் முழுமையாக இயங்காத நிலை நீடிக்கிறது.
இதனால் டிசம்பர் 30-ந் தேதிக்குப் பின்னரும் கூட தற்போதைய பணத்தட்டுப்பாட்டு நிலைமை தொடரவே வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications