பெண் கொடுக்காத ஆத்திரம்: சொந்தக்காரர்களின் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசிய இளைஞர்: ஐவர் படுகாயம்
விருதாச்சலம்: திருமணத்திற்கு பெண் கொடுக்க மறுத்த உறவினர்களின் வீடுகளை பெட்ரோல் குண்டு வீசி எரித்துள்ளார் இளைஞர் ஒருவர். இதில் 5பேர் படுகாயமடைந்தனர். குண்டு வீசிவிட்டு தலைமறைவான அந்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
கடலுார் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த, தொட்டிக்குப்பத்தைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவரது மனைவி பழனியம்மாள். இவர்களுக்கு, ராஜலட்சுமி, 23, சங்கீதா, 19, உட்பட, நான்கு மகள்கள் உள்ளனர். ராஜலட்சுமிக்கு, திருமணமாகி, இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
அரியலுார் மாவட்டம், பரனம் கிராமத்தைச் சேர்ந்த, செல்வக்குமார், 35, என்பவர், தொட்டிக்குப்பம் வந்தபோது, ராஜலட்சுமியின் தங்கை சங்கீதா மீது, அவருக்கு ஒரு தலையாக காதல் ஏற்பட்டுள்ளது.
செல்வக்குமாரை திருமணம் செய்ய விரும்பாத சங்கீதா, சகோதரி ராஜலட்சுமியின் மைத்துனர் சந்திரசேகரை, 24, ஆறு மாதங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டார்.
இதனால் ஆத்திரமடைந்த செல்வக்குமார், சங்கீதாவை திருமணம் செய்ய தடையாக இருந்த ராஜலட்சுமி, உறவினர் ராமலிங்கம் ஆகிய இருவரையும், பழிவாங்க காத்திருந்தார்.
ராஜலட்சுமியின் கணவர் வெளிநாடு சென்ற நிலையில், குழந்தைகளுடன், நேற்று முன்தினம் இரவு, வீட்டில் துாங்கி கொண்டிருந்தார். நள்ளிரவு, 1:45மணியளவில், வீட்டின் கதவை வெளிப்புறமாக பூட்டிய மர்ம நபர்கள், கூரை மீது, பெட்ரோல் ஊற்றி, சமையல் எரிவாயுவை, டியூப் மூலம், ஜன்னல் வழியாக வீட்டிற்குள் திறந்து விட்டு, வெடி குண்டுகளை வீசி தப்பிச் சென்றனர்.
பயங்கர சத்தத்துடன், குண்டு வெடித்து, வீடு தீப்பற்றி எரிந்தது. வீடு வெளிப்புறமாக பூட்டியிருந்ததால், தப்பிக்க முடியாமல், ராஜலட்சுமி கூச்சலிட்டார். அருகிலிருந்தவர்கள், பூட்டை உடைத்து, ராஜலட்சுமி மற்றும் இரு குழந்தைகளை மீட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த விருத்தாசலம் தீயணைப்பு நிலைய வீரர்கள், தீயை அணைத்தனர். இதில் வீட்டிற்குள் இருந்த இருசக்கர வாகனம், பீரோ, கட்டில், வீட்டு உபயோக பொருட்கள் தீயில் எரிந்து சாம்பலானது.
இதைத் தொடர்ந்து, மர்ம நபர்கள், நள்ளிரவு, 2:00 மணியளவில், சங்கீதாவின் உறவினர் ராமலிங்கம் வீட்டின் மீது, இரண்டு வெடி குண்டுகளை வீசிவிட்டு தப்பிச் சென்றனர்.
ஒரு குண்டு வெடித்ததில், ராமலிங்கம், அவரது மனைவி யசோதை, 53, படுகாயமடைந்தனர். வெடிகுண்டு வீசியதில், காயமடைந்த, 5 பேரும், அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். போலீசார் வழக்குப் பதிவு செய்து தப்பியோடிய செல்வகுமாரையும், மர்மநபர்களையும் தேடி வருகின்றனர்.
திருமணத்திற்குப் பெண் கொடுக்கவில்லை என்று பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் விருதாச்சலத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.