சென்னை விமான நிலையத்தில் 5 கிலோ தங்கம் பறிமுதல்... சிங்கப்பூர், ஷார்ஜா பயணிகளிடம் விசாரணை
சென்னை : சிங்கப்பூர் மற்றும் ஷார்ஜாவில் இருந்து கடத்தி வரப்பட்ட ஐந்து கிலோவுக்கும் அதிகமான தங்கத்தை. சென்னை விமான நிலையத்தில் வருவாய் புலனாய்வு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ஷார்ஜாவில் இருந்து இன்று அதிகாலை சென்னைக்கு வந்த, ஏர்- அரேபியா விமானத்தில் வந்த அக்பர் பாஷா என்ற பயணியின் உடமைகளை ஆய்வு செய்த போது, அதில், 4 கிலோ தங்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதனை, விமான நிலைய ஊழியர்கள் உதவியுடன், அவர் விமான நிலையத்தில் இருந்து வெளியே கொண்டு செல்ல திட்டமிட்டதும் விசாரணையில் தெரியவந்தது.
இதேபோல், சிங்கப்பூரில் இருந்து இன்று காலை சென்னைக்கு வந்த மற்றொரு விமானத்தில் வந்த சுல்தான் இப்ராஹிம் என்பவரிடம் நடத்தப்பட்ட சோதனையில், ஒரு கிலோ 200 கிராம் தங்கம் பிடிபட்டது. இவர்களைக் கைது செய்த வருவாய் புலனாய்வு அதிகாரிகள், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தென் மாநிலங்களில் உள்ள விமான நிலையங்கள் மூலம் தங்கம் கடத்தப்படுவது அதிகரித்து வருவதாக மத்திய அரசு எச்சரித்துள்ளதையடுத்து, சென்னை உள்ளிட்ட விமான நிலையங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.