கோவை விமான நிலையத்தில் ரூ.1.50 கோடி மதிப்பிலான 5 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்!
விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் 5 கிலோ கடத்தல் தங்கத்தினை பறிமுதல் செய்தனர்.
கோவை: கோவை விமான நிலையத்தில் இரு வேறு விமானங்களில் வந்த பயணிகளிடமிருந்து கடத்தி வரப்பட்ட சுமார் ஒன்றரை கோடி மதிப்புள்ள 5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
கோவை விமானநிலையத்தில், சமீபகாலமாக தங்கம் கடத்துவது அதிகரித்து வருகிறது. குறிப்பாக துபாய் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் இருந்து, வரும் விமானங்களில் அதிகளவு தங்கம் கடத்தப்படுகிறது.

இந்நிலையில், சார்ஜாவில் இருந்து ஏர்அரேபியா விமானத்தில், இளைஞர் ஒருவர் நேற்று வந்துள்ளார். வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் அவரிடம் சோதனை நடத்தினர். சோதனையில் அவர் கொண்டு வந்திருந்த எலக்ட்ரானிக் பொருளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2988.500 கிராம் எடை கொண்ட 52 தங்க கட்டிகளை பறிமுதல் செய்தனர்.
அதன் மதிப்பு 96 லட்சத்து 52 ஆயிரம் ரூபாய் என அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் அவரிடம் நடத்திய விசாரனையில் அவரது பெயர் உனைஸ் என்பது தெரிய வந்துள்ளது. அவரை கைது செய்து தொடர்ந்து விசாரனை நடைபெற்று வருகிறது.
இதே போல கடந்த 10 ந்தேதி இலங்கையிலிருந்து கோவை வந்த விமானத்தில் வந்த 7 பயணிகளிடமிருந்து 2040 கிராம் தங்க கட்டிகளை விமான நிலைய அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். அதன் மதிப்பு 65 லட்சத்து 89 ஆயிரம் ரூபாய். அவர்களையும் கைது செய்து விமான நிலைய அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
ஒரே வாரத்தில் கோவை விமான நிலையத்தில் சுமார் ஒன்றரை கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்ட இச்சம்பவம் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.












Click it and Unblock the Notifications