முத்தூட் மினி நிதி நிறுவனத்தில் 5 கிலோ தங்க நகைகள் கொள்ளை
சேலம்: சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கெங்கவல்லியில் காவல் நிலையம் எதிரே தங்க நகைகளை அடமானம் பெற்று கடன் தரும் நிதி நிறுவனத்தில் 5 கிலோ தங்க நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கெங்கவல்லியில் உள்ள முத்தூட் மினி நிதி நிறுவனத்தில் பின்பக்க கதவை உடைத்து மர்மநபர்கள் பணம் மற்றும் நகைகளைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இன்று காலையில் நிதி நிறுவன அலுவலகத்தை திறந்த போது நகைகள் கொள்ளை போனது தெரியவந்தது. காவல் நிலையம் எதிரிலேயே கொள்ளை நிகழ்ந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வந்து போலீசார் சோதனை நடத்தியதில் எச்சரிக்கை அலாரம் நிறுத்தப்பட்டிருந்தது. மேலும் சிசிடிவி கேமராவும் நிறுத்தப்பட்டிருந்தது தெரியவந்தது. நகைகள் கொள்ளை போனது குறித்து முத்தூட் மினி நிறுவன அதிகாரிகளிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

முத்தூர் நிதி நிறுவனத்திற்கு தமிழகம் முழுவதும் கிளைகள் உள்ளன. பல கிளைகளில் ஏராளமான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு பின்னர் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.
கடந்த 2011ம் ஆண்டு திருப்பூர் காங்கேயம் சாலையில் உள்ள முத்தூட் மினி நிதி நிறுவனத்திற்குள் புகுந்த கொள்ளைக் கும்பல் கத்தி முனையில் 1381 பவுன் தங்க, வெள்ளி நகைகளை கொள்ளையடித்துச் சென்றது.
பட்டப் பகலில் நடந்த இந்த அதி பயங்கர கொள்ளைச் சம்பவத்தால் அந்த நிறுவனத்தில் நகைகளை அடகு வைத்திருந்த மக்கள் பதை பதைத்துப் போயினர். இந்த நிலையில் கொள்ளைக் கும்பலைப் பிடிக்க திருப்பூர், ஈரோடு, கோவை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த போலீஸாரைக் கொண்டு 11 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
கொள்ளையில் ஈடுபட்ட கும்பல், போகும்போது முத்தூட் நிறுவன ஊழியர்களின் செல்போன்களையும் திருடிச் சென்றிருந்தனர். இதையடுத்து அந்த செல்போன்களின் டவர்களை வைத்து போலீஸார் அவர்களது நடமாட்டத்தைக் கண்காணித்து 6 பேரை கைது செய்தனர். இந்தக் கும்பலில் இடம் பெற்றுள்ள முக்கிய நபர் வெங்கடேசன். இவன்தான் இந்தக் கொள்ளைக் கும்பலுக்குத் தலைவன் போல செயல்பட்டுள்ளான். இவன் முத்தூட் மினி நிறுவனத்தில் பணியாற்றியவன் என்பது தெரியவந்தது.
கடந்த 2014ம் ஆண்டு மதுரையில் முத்தூட் நிதி நிறுவனத்தில் 5 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. பொதுமக்களே கொள்ளையர்களை விரட்டி பிடித்து நகைகளை மீட்டனர்.
இந்த நிலையில் ஆத்தூர் அருகே கெங்கவல்லியில் உள்ள முத்தூட் மினி நிதி நிறுவனத்தில் நகைகள் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதால் நகைகளை அடமானம் வைத்தவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications