முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த முடிவு !! ஐவர் துணைக் குழு திடீர் ஆய்வு!!!
தேனி : முல்லைப் பெரியாறு அணையில் திடீர் ஆய்வு மேற்கொண்ட ஐவர் துணைக் குழு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த முடிவு செய்துள்ளது.
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், அணையை கண்காணித்து பராமரிக்க, மத்திய நீர்வள ஆணைய தலைமை பொறியாளர் நாதன் தலைமையில் மூவர் கொண்ட கண்காணிப்பு குழுவை நியமித்தது.

இந்த குழுவிற்கு உதவியாக அணையில் கசிவு நீரின் அளவை கணக்கிடுவது, அணையில் ஏற்படும் புதிய மாற்றங்கள் குறித்து மூவர் கண்காணிப்பு குழுவிற்கு தெரிவிப்பதற்காக, மத்திய நீர்வள ஆணைய செயற்பொறியாளர் அம்பர்ஜி ஹாரிஷ்கிரீஷ் தலைமையில் துணைக்குழு ஒன்றும் அமைக்கப்பட்டது.
இந்த துணை குழுவில் தமிழகம் சார்பில், முல்லைப் பெரியாறு அணை செயற்பொறியாளர் மாதவன், உதவி செயற்பொறியாளர் சவுந்தரம், கேரள அரசின் பிரதிநிதிகளாக செயற்பொறியாளர் ஜார்ஜ் டேனியல், உதவிப்பொறியாளர் எஸ்.என். பிரஷீத் ஆகியோரும் உள்ளனர்.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியிருப்பதால், நீர்வரத்து அதிகம் இருக்கும், இந்த நிலையில் சனிக்கிழமை முல்லைப் பெரியாறு அணையில் இந்த ஐவர் துணைக்குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வில் வழக்கமாக உள்ள நீர்வரத்து, வெளியேற்றம், கசிவு நீர் அளவு ஆகியவை குறித்து ஐவர் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். மேலும், அணையிலிருந்து கேரளாவுக்கு திறந்து விடப்படும் 13 மதகுகளில் குறிப்பிட்ட இரண்டு மதகுகளின் இயக்கம் சரிபார்க்கப்பட்டது.
பின்னர், குமுளியில் உள்ள அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்தில், தென்மேற்கு பருவமழை கேரளாவில் துவங்கி இருப்பதால், அணையின் நீர்மட்டத்தை உயர்த்த அனைத்து நடவடிக்கைகளும் தயார் நிலையில் இருப்பதாக ஐவர் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை நாதன் தலைமையிலான தலைமை மூவர் கண்காணிப்பு குழுவுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.












Click it and Unblock the Notifications