ரேசன் பொருட்கள் கடத்தி விற்பனை- 5 பேர் அதிரடி கைது
நெல்லை: நெல்லை அருகே ரேசன் கடையில் இருந்து பொருட்களை அபேஸ் செய்து விற்பனை செய்ய இருந்த ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.
சேரன்மகாதேவியை சுற்றியுள்ள பகுதியில் உள்ள ரேஷன் கடைகளுக்கு அம்பாசமுத்திரம் நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் இருந்து லாரிகளில் பொருட்கள் கொண்டு செல்லப்படுவது வழக்கம்.
அவ்வாறு லாரியில் ரேஷன் பொருட்களை கொண்டு செல்லும் போது சிலர் சாக்குகளில் துளையிட்டு பொருட்களை திருடிச் செல்வதாக தொடர்ந்து பல்வேறு புகார்கள் வந்தன.

இந்நிலையில் சேரன் மகாதேவியை அடுத்த புதுக்குடியில் உள்ள ரேஷன் கடைக்கு வந்த லாரியில் அதன் டிரைவர் மற்றும் சிலர் சேர்ந்து ரேஷன் பொருட்களை திருடி பதுக்கி வைத்திருப்பதாக சப் கலெக்டர் விஷ்ணுவிற்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சப் கலெக்டர் விஷ்ணு புதுக்குடிக்கு சென்று லாரியை சோதனையிட்டார்.
அப்போது டிரைவரின் இருக்கைக்கு அடியில் 10 கிலோ ரேஷன் பருப்பு மற்றும் 24 கிலோ சீனி ஆகியவை பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இதனையடுத்து லாரியை பறிமுதல் செய்து வீரவநல்லூர் போலீசில் ஒப்படைத்தார்.
மேலும் பொருட்களை திருடியதாக லாரி டிரைவர் அம்பை சுப்பிரமணியபுரம் பொத்தையை சேர்ந்த இசக்கி, வைராவிகுளத்தை சேர்ந்த சுப்பிரமணியன், வாகைகுளம் பள்ளிவாசல் தெருவை சேர்ந்த மசூதுசேட், கோடரங்குளத்தை சேர்ந்த வெங்கடேஷ், வாகைகுளம் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்த சுப்பிரமணியன் ஆகிய ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.












Click it and Unblock the Notifications