விடாத மழையிலும் ஆட்டையைப் போடும் தீபாவளி திருடர்கள்.. 3 பெண்கள் உள்பட 5 பேர் கைது
சென்னை: மழை பெய்தாலும் கூட திருடர்கள் சற்றும் ஓயாமல், தீபாவளி கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி திருடி வருகின்றனர். இதனால் பொதுமக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்குமாறு காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது. இன்று 5 பிக்பாக்கெட்டுகளைப் போலீஸார் பிடித்துள்ளனர்.
நாளை மறு நாள் தீபாவளி. இதனால் கடைசி நேர பர்ச்சேஸில் மக்கள் மும்முரமாக உள்ளனர். சென்னையிலும் தமிழகத்தின் அனைத்து நகரங்களிலும் கடைசி நேர தீபாவளி வர்த்தகம் களை கட்டியுள்ளது. தொடர்ந்து பெய்யும் மழையால் சென்னையில் போக்குவரத்து பெரும் பாதிப்பைச் சந்தித்தாலும் கூட மக்கள் கூட்டத்திற்குக் குறைவே இல்லை.

வழக்கம் போல வர்த்தக பகுதிகளான தி.நகர், புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை, பாரிமுனை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 2 நாட்களாகவே பொதுமக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. இன்று காலையில் இருந்தே கடைகளில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
காலையில் இருந்தே சென்னையில் விட்டு விட்டு அனைத்து பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. ஆனாலும் மக்கள் அதைப் பற்றிக் கவலையே படாமல் சாரை சாரையாக கடைகளுக்குப் படையெடுத்து வருகிறார்கள்.
இந்த நிலையில் தீபாவளி கூட்டத்தை பயன்படுத்தி பிக்பாக்கெட் கொள்ளையர்கள் கைவரிசை காட்டுவதை தடுக்க போலீசாரும் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர். தி.நகரில் துணை கமிஷனர் சரவணன், உதவி கமிஷனர் ராதாகிருஷ்ணன் ஆகியோரது மேற்பார்வையில் மாம்பலம் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி, அப்பாதுரை மற்றும் போலீசார் திவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
பொதுமக்கள் தங்களது உடமைகளை பத்திரமாக பார்த்துக்கொள்ளும்படி ஒலி பெருக்கி மூலமாக எச்சரிக்கை விடுத்துக்கொண்டே இருக்கிறார்கள். யாராவது உங்களது கவனத்தை திசை திருப்பி பொருட்களை பறிக்கும் முயற்சியில் ஈடுபடலாம். போலீஸ் என்று கூறி யாராவது விசாரித்தால் அவர்களது அடையாள அட்டையை காட்டச் சொல்லுங்கள் என்றும் எச்சரிக்கை விடுத்துக்கொண்டே இருந்தனர்.
இந்த நிலையில் தி.நகர் பஸ் நிலையம் அருகில் வைத்து பெண் ஒருவரிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட நபர் பிடிபட்டார். அவரது பெயர் சதீஷ். பெரம்பூரைச் சேர்ந்த இவரிடமிருந்து திருட்டு மோட்டார்சைக்கிள் ஒன்றையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
இதே போல தி.நகர் பகுதியில் மோட்டார் சைக்கிள்களை திருடும் இன்னொரு சதீஷ் என்ற வாலிபரும் பிடிபட்டுள்ளார்.
வடபழனி வேங்கீஸ்வரன் நகர் பகுதியில் துரைசாமி ரோடு பஸ் நிறுத்தம் அருகில் பூ விற்கும் பெண் ஒருவரிடம் 3 பெண்கள் செயினை பறித்துக்கொண்டு ஓடினர். அவர்களை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது அவர்களது பெயர் செல்வி, தமிழ், லட்சுமி என்று தெரிய வந்தது. 3 பேரும் ஆந்திர எல்லையோர தமிழக பகுதியைச் சேர்ந்தவர்கள் தீபாவளி கூட்டத்தை பயன்படுத்தி பஸ்களில் பிக்பாக்கெட் அடிப்பதற்காக அவர்கள் வந்தது தெரிய வந்தது. அப்போது தான் அவர்கள் சங்கிலி பறித்து சிக்கினர்.












Click it and Unblock the Notifications