மேகி நூடுல்ஸ் நச்சு: ஆய்வு செய்ய தமிழகம் உள்ளிட்ட 5 மாநில அரசுகள் உத்தரவு
சென்னை: நெஸ்லே தயாரிப்பான மேகி நூடுல்ஸ் சாப்பிடத் தகுதியானதா..? என ஆய்வு செய்ய தமிழகம் உள்ளிட்ட மாநில அரசுகள் உத்தரவிட்டுள்ளன.
மேகி நூடுல்ஸ்' உணவுப் பொருளில் சுவையை அளிக்கும் "மோனோசோடியம் குளுட்டாமேட்' என்ற ரசாயனப் பொருள் அதிகம் கலந்திருப்பதாக ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த மோனோசோடியம் குளுட்டமேட் உடனடியாக தலைவலி, கை கால் பலவீனம், வயிற்றுக் கோளாறு, அலர்ஜி என ஏகப்பட்ட உடற்கோளாறுகளை உண்டாக்கும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
அதிக அளவு நூடுல்ஸ் சாப்பிடுபவர்கள் நிரந்தர நோயாளிகளாகிவிடுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இதைத் தொடர்ந்து மேகி நூடுல்ஸை சாப்பிட உடனடியாக டெல்லி மற்றும் கேரள அரசுகள் தடை விதித்துவிட்டன. கேரளாவின் அனைத்து கடைகளிலிருந்தும் மேகியை அப்புறப்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகம்
கேரளா, டெல்லியில் விதிக்கப்பட்ட தடையைத் தொடர்ந்து 'மேகி நூடுல்ஸ்' மாதிரிகளைச் சோதனை செய்ய தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த உத்தரவின் அடிப்படையில் "மேகி நூடுல்ஸ்' மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சென்னை,கோயம்புத்தூர், சேலம், தஞ்சாவூர், திருநெல்வேலி, மதுரை ஆகிய ஆறு இடங்களில் உள்ள உணவுப் பாதுகாப்பு ஆய்வு பரிசோதனைக் கூடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

ஹரியாணா
இதேபோன்ற உத்தரவை ஹரியாணா மாநில அரசும் பிறப்பித்துள்ளது. இதுகுறித்து அந்த மாநில சுகாதாரத் துறை அமைச்சர் அனில் விஜ் கூறுகையில் அனைத்து மாவட்டங்களிலும் மேகி நூடுல்ஸ் மாதிரிகளை சேகரிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அவற்றை ஆய்வகங்களுக்கு அனுப்பி ஆய்வு செய்வோம். அதில், உணவு தரக் கட்டுப்பாடு விதிகள் மீறப்பட்டிருப்பது தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பாக, மாநிலம் முழுவதும் விற்பனைக்கு வந்துள்ள மேகி நூடுல்ஸ் பொட்டலங்களை திரும்ப பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுப்போம் என்றார்.

உத்தர்கண்ட்
அடுத்து உத்தர்கண்ட் மாநில அரசின் உணவுப் பாதுகாப்புத் துறையில் மேகி நூடுல்ஸ் மாதிரிகளை ஆய்வுக்குட்படுத்த உத்தரவிட்டுள்ளது. பல்வேறு மாவட்டங்களில் எடுக்கப்பட்ட மாதிரிகளை பட்னா நகர் ஆய்வுக் கூடத்தில் சோதனை செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது அம்மாநில அரசு.

தெலங்கானா
மேகி நூடுல்ஸை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை அதிகரித்துள்ளதால், தெலங்கானா மாநில அரசும் மேகி மாதிரிகளை ஆய்வுக்குட்படுத்த உத்தரவிட்டுள்ளது. நூடுல்சில் நச்சுத் தன்மை காணப்பட்டால், நெஸ்லே நிறுவனம் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்வோம் என அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் எச்சரித்துள்ளார்.












Click it and Unblock the Notifications