அசைவ திருவிழா: 200 ஆடுகளை வெட்டி முனியாண்டிக்கு படையலிட்ட கிராம மக்கள்
மதுரை: மதுரை அருகே தங்களின் குலதெய்வமான முனியாண்டி சுவாமிக்கு நூற்றுக்கணக்கான ஆடுகளை பலியிட்டு அதை உணவு சமைத்து ஊர் மக்களுக்கு கறிவிருந்து படைத்துள்ளனர் முனியாண்டிவிலாஸ் ஹோட்டல் உரிமையாளர்கள்.
திருமங்கலம் அருகேயுள்ள எஸ்.கோபாலபுரத்தில் முனியாண்டி கோயில் உள்ளது. இந்தக் கோயிலின் பெயரில்தான் புகழ்பெற்ற முனியாண்டி விலாஸ் ஓட்டல்கள் தமிழகம் முழுவதும் அமைந்துள்ளன.
ஒவ்வொரு ஆண்டும் மாட்டுப் பொங்கல் அன்று கோபாலபுரம் முனியாண்டி கோயிலில் சுவாமிக்கு சிறப்பு பூஜையுடன் அசைவ உணவுப் பரிமாறும் அசைவ உணவுத் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
இதில் தமிழகம் மட்டுமின்றி வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வர்.இங்கு ஆண்டு தோறும் தைமாதம் திருவிழா நடைபெறும். பொங்கல் பண்டிகையின் மறுநாள் அசைவ உணவு திருவிழா கோலாகலமாக நடைபெறும்.
இந்த ஆண்டு பொங்கல் திருவிழா எஸ்.கோபாலபுரத்தில் முனியாண்டிசாமி கோயிலில் கடந்த 4ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய அம்சமான அசைவ உணவு திருவிழா 16ஆம் தேதி நடைபெற்றது.

பாலபிஷேகம்
காலையில் ஊர்மக்கள் பால்குடம் எடுத்துவந்து சுவாமிக்கு பாலாபிஷேகம் செய்தனர்.மாலை 5 மணியளவில் கிராமமக்கள் அபிஷேகத்தட்டுகளை ஊர்வலமாக எடுத்து வந்தனர்.

சிறப்பு ஆராதனை
முக்கிய வீதிகள் வழியாக சென்ற இந்த ஊர்வலத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஊர்வலம் கோயிலை அடைந்த பின்னர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளுடன் பூஜைகள் நடைபெற்றன.

200 ஆடுகள் பலி
இதைத்தொடர்ந்து 200 ஆடுகளை வெட்டி பொதுமக்களுக்கு அசைவ உணவு பரிமாறப்பட்டது. இதில் கோபாலபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் முனியாண்டி விலாஸ் ஓட்டல் நடத்துபவர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.

நினைத்தது நிறைவேறும்
‘முனியாண்டி சுவாமியை நினைத்து வேண்டிக்கொண்டால் நிச்சயம் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும். அசைவ உணவு விருந்து உண்ட கையோடு இரவில் நடைபெற்ற வாணவேடிக்கைகள், கலைநிகழ்ச்சிகளையும் ரசித்தனர் பொதுமக்கள்.












Click it and Unblock the Notifications