ஜெயலலிதாவை விடுதலை செய்ய வேண்டும்... வேலூரில் 54 அதிமுகவினர் ‘மொட்டை’
வேலூர் : சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றுள்ள அதிமுக பொதுச் செயளாலர் ஜெயலலிதாவை விடுதலை செய்யக் கோரி, வேலூரில் அதிமுக தொண்டர்கள் 54 பேர் மொட்டை போட்டுக் கொண்டனர்.
18 வருடங்களாக ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் மீது நடைபெற்று வந்த சொத்துக் குவிப்பு வழக்கில் கடந்த சனிக்கிழமையன்று பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதன்படி ஜெயலலிதா தற்போது பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
ஜெயலலிதாவை விடுதலை செய்யக் கோரி, அதிமுகவினர் நாடு முழுவதும் வெவ்வேறு வகையில் தங்களது எதிர்ப்புகளை போராட்டங்கள் மூலமாக தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், வேலூர் சேண்பாக்கம் காந்தி சிலை அருகே ஒன்றிய செயலாளர் என்.கர்ணல் தலைமையில், கவுன்சிலர் விஜி முன்னிலையில் அ.தி.மு.க.வினர் மொட்டை போட்டு கொண்டனர். இதில் ஒன்றிய செயலாளர் கர்ணல், ஜெயலலிதா பேரவை ஒன்றிய செயலாளர் ஜானகிராமன் மற்றும் பெண்கள், சிறுவர்கள் உள்பட மொத்தம் 54 பேர் மொட்டை போட்டு கொண்டனர்.
ஜெயலலிதாவுக்கு விடுதலை கிடைக்க வேண்டும் என்று மேயர் கார்த்தியாயினி தலைமையில் வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோவிலில் ருத்ராபிஷேகம் நடந்தது. இதில் சிவாச்சாரியார்கள் சிறப்பு அபிஷேகம் செய்தனர்.
அதேபோல், வேலூர் மாவட்ட ஒருங்கிணைந்த அண்ணா தொழிற்சங்கம் சார்பில் வேலூர் பழைய மாநகராட்சி அருகில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இந்த உண்ணாவிரதப் போராட்டத்தின் போது மகளிர் அணி இணை செயலாளர் சாரதா திடீரென மண்ணெண்ணையை தனது உடலில் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயற்சித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அருகிலிருந்த கட்சி நிர்வாகிகள் அவர் மீது தண்ணீர் ஊற்றி காப்பாற்றினர்.












Click it and Unblock the Notifications