மினி வேனில் இருந்த வான வெடிகள் வெடித்ததில் 6 பேர் காயம்... திருமண ஊர்வலத்தில் சோகம்
விழுப்புரம்: விழுப்புரம் அருகே திருமண ஊர்வலத்தில் எதிர்பாராமல் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கிய ஆறு பேர் பலத்த தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே பெரியசெவலை கிராமத்தை சேர்ந்தவர் பிரகாஷ் (28). தமிழக வாழ்வுரிமை கட்சியின் திருவெண்ணை நல்லூர் ஒன்றிய செயலாளராக உள்ள பிரகாஷுக்கு, இன்று காலை பெரிய செவலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது.
திருமணத்திற்கு முன்னதாக நேற்றிரவு பெண் அழைக்கும் ஊர்வலம் நடந்தது. இதற்காக பிரகாசின் நண்பர்களான பெரிய செவலையை சேர்ந்த செல்வம் (23), சரவணன் (23), அர்ச்சுணன் (21) ஆகியோர் ஒரு மினி வேனில் கோகுலாபுரத்துக்கு சென்று 6 பெட்டிகளில் வான வெடிகளை வாங்கி வந்தனர். மினி வேனை அதே பகுதியை சேர்ந்த வெங்கடேசன் (49) என்பவர் ஓட்டி வந்துள்ளார்.
பெண் அழைப்பு ஊர்வலம் நடந்த போதே, மினி வேனில் இருந்தபடியே வானவேடிக்கை வெடிக்கச் செய்ய முயற்சித்ததாகக் கூறப்படுகிறது. இதில் எதிர்பாராத விதமாக மினிவேனில் இருந்த ஆறு பெட்டி வானவெடிகளின் மீதும் நெருப்பு பற்றியது.
பயங்கர சத்தத்துடன் அனைத்து வான வெடிகளும் வெடித்ததால், மினி வேன் தீப்பிடித்தது. இதில் மினி வேனில் இருந்த செல்வம், சரவணன், அர்ச்சுணன், வெங்கடேசன் மற்றும் பெண் அழைப்பு ஊர்வலத்தில் வந்த அவர்கள் 2 பேர் உள்பட 6 பேர் உடல் கருகினர்.
தீக்காயம் அடைந்தவர்கள் உடனடியாக திருவெண்ணைநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக செல்வம், சரவணன் ஆகியோர் சென்னை கீழ்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியிலும், அர்ச்சுணன் புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியிலும், வெங்கடேசன் முண்டியம் பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியிலும் மற்ற 2 பேர் தனியார் ஆஸ்பத்திரியிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சிகிச்சைப் பெற்று வருபவர்களில் செல்வம், சரவணன் ஆகியோரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக அவர்களது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து திருவெண்ணைநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேந்திரன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மகிழ்ச்சியாக நடைபெற வேண்டிய திருமண நிகழ்ச்சியில் வெடி விபத்தில் சிக்கி 6 பேர் தீக்காயம் அடைந்தது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.