போலி ”இன்டர்வியூ” - பெண் உட்பட 6 பேர் கைது
சென்னை: சென்னையில் பிரபல நிறுவனத்தின் பெயரில் போலி வேலை வாய்ப்பு முகாம் நடத்திய பெண் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை தியாகராயநகர் தணிகாசலம் சாலையில் உள்ள ஒரு ஓட்டலில், பிரபல நிறுவன பெயரில் வேலைக்கான நேர்காணல் நடத்தப்பட்டது. இதில் கலந்து கொண்டவர்களிடம், "ரூபாய் 40 ஆயிரம் சம்பளத்தில் வேலை நிச்சயம் கிடைக்கும். 2 மாத சம்பளத்தை முன்கூட்டியே கொடுத்து விட வேண்டும்" என்று வலியுறுத்தப்பட்டது.

நேர்காணலில் கலந்து கொண்ட ஒருவர் சந்தேகம் அடைந்து, சம்பந்தப்பட்ட நிறுவனத்துடன் போனில் தொடர்பு கொண்டு விசாரித்தார். அவர்கள், தங்கள் நிறுவனத்துக்கும் நேர்காணலுக்கும் சம்பந்தம் இல்லை. அப்படி தாங்கள் ஏதும் ஏற்பாடு செய்யவில்லை என்று பதில் கூறினர். உடனே அவர் இதுகுறித்து மாம்பலம் போலீசில் புகார் கொடுத்தார்.
மாம்பலம் போலீஸ் இணை கமிஷனர் அருண் உத்தரவின்பேரில் தனிப்படையினர் விரைந்து செயல்பட்டு, ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த கிருஷ்ணகுமார், டெல்லி சிவகுமார், ராஜன்குமார், அனுஜ், அனில்கவுதம் மற்றும் ஒரு பெண் நிஷாகுப்தா ஆகிய 6 பேரை கைது செய்தனர். 2 லேப்டாப், ஒரு பிரிண்டர் மற்றும் போலி ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.












Click it and Unblock the Notifications