சென்னை நகைக்கடையில் துளையிட்டு 3.5 கிலோ தங்கம் அபேஸ்... கொள்ளையர்களை வளைக்க 6 தனிப்படை!
சென்னையில் நகைக்கடையின் மேற்கூரையை துளையிட்டு இறங்கி மூன்றரை கிலோ தங்கத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை: கொளத்தூர் பகுதியில் பட்டபகலில் நகைக்கடையை துளையிட்டு நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை பிடிப்பதற்காக 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
சென்னை கொளத்தூர் ரெட்டேரி அருகில் உள்ள கடப்பா தெருவில் நகைக்கடை நடத்தி வருகிறார் முகேஷ் குமார். இவரது நகைக்கடைக்கு மேல் உள்ள கடையை வடமாநிலத்தை சேர்ந்த ராஜேஷ் என்பவர் வாடகைக்கு எடுத்துள்ளார்.
நேற்று முகேஷ்குமார் கடையை பூட்டிவிட்டு மதிய உணவிற்காக வீட்டிற்கு சென்றுவிட்டு மாலை 4 மணியளவில் கடைக்கு திரும்பியுள்ளார். அப்போது கடையின் மேல்புறத்தில் இருந்து ஒரு ஆள் வந்து செல்லும் அளவிற்கு தளையிடப்பட்டு நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது கண்டு முகேஷ் அதிர்ந்துள்ளார்.
மாடியில் இருந்து துளை போட்டு
இதனையடுத்து போலீசாருக்கு கொள்ளை சம்பவம் குறித்து முகேஷ் தகவல் அளித்துள்ளார். அப்போது கடையில் இருந்த 3.5 கிலோ தங்கம் மற்றும் 4 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் 2 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.
ராஜேஷிற்கு தொடர்பு?
இந்த கொள்ளை சம்பவம் குறித்து ராஜமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளைக்கு கடையின் மேல்தளத்தில் வடமாநிலத்தை சேர்ந்த ராஜேஷிற்கும் தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.
சிசிடிவி காட்சிகள் ஆய்வு
ராஜேசுடன் அவனது நண்பர்களும் கொள்ளையில் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இதனையடுத்து அந்தப் பகுதிகளில் உள்ள சிசிடிவி காமராக்களில் பதிவாகியுள்ள காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
6 தனிப்படைகள்
இதனிடையே பட்டபகலில் நடைபெற்ற இந்த கொள்ளை சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொள்ளையர்களை விரைந்து பிடிக்கும் வகையில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.