சூலூரில் தொடரும் முகமூடி கொள்ளையர் அட்டகாசம்.. தாய்-மகளிடம் கத்திமுனையில் 7 பவுன் நகை கொள்ளை
தாய், மகளிடம் 7 பவுன் நகையை பறித்து முகமூடி கும்பல் அட்டகாசம் செய்துள்ளது.
கோவை: மளிகை கடை சென்றுவிட்டு திரும்பி கொண்டிருந்த தாய், மகளிடம் 7 பவுன் நகையை பறித்து சென்ற முகமூடி கும்பலை சூலூர் போலீசார் தேடி வருகிறார்கள்.
சூலூர் அருகே உள்ள கருமத்தம்பட்டி பிருந்தாவன் கார்டன் பகுதியில் பிரியலதா 36, மற்றும் அவரது மகள் ராகவி நேற்றிரவு மளிகை கடை சென்றுவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது 3 பேர் முகமூடி அணிந்து அங்கு வந்தனர். அவர்களது கையில் கத்தி, அரிவாள் வைத்திருந்தனர்.

பின்னர் தாய், மகளிடம் கத்தியை காட்டி, அவர்கள் அணிந்துள்ள மொத்த நகையையும் கழட்டி தருமாறு மிரட்டினர். ஆனால் நகைகளை தர முடியாது என்று பிரியலதா சொல்லியிருக்கிறார். இதனால் ஆத்திரம் அடைந்த மர்மகும்பல், தாய்-மகளிடம் பயங்கர ஆயுதங்களை காட்டி கத்தி முனையில் ஏழரை பவுன் நகையை பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் தப்பியது.
இதனால் அதிர்ச்சியடைந்த பிரியலதா கருமத்தம்பட்டி போலீசில் உடனடியாக புகார் அளித்தார். அதனடிப்படையில் மோப்பமாய், கைரேகை நிபுணர்களுடன் போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த கும்பல் சூலூர் பகுதியில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வருபவர்கள் என தெரியவந்தது. அக்கொள்ளையர்களை விரைந்துபிடிக்க வேண்டும் என அப்பகுதியில் பாதிக்கப்பட்ட பொதுமக்களும், வேண்டுகோள் விடுத்தனர். இதையடுத்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications