இடைத் தேர்தல்: 750 வாக்குப் பதிவு இயந்திரங்கள் ஸ்ரீரங்கம் பயணம்!
சென்னை: ஸ்ரீரங்கம் இடைத் தேர்தலுக்கான ஏற்பாடுகளில் தேர்தல் ஆணையம் மும்முரமாகியுள்ளது. வாக்குப் பதிவுக்குத் தேவையான வாக்குப் பதிவு இயந்திரங்கள் தற்போது ஸ்ரீரங்கத்திற்குப் பயணமாகத் தொடங்கியுள்ளன.
இன்று சேலத்திலிருந்து 750 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் ஸ்ரீரங்கத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டன.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகாலம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இதனால் ஜெயலலிதாவின் முதல்வர் பதவி மற்றும் ஸ்ரீரங்கம் தொகுதி சட்டசபை உறுப்பினர் பதவி பறிபோனது. அவர் மொத்தம் 10 ஆண்டுகாலம் தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து ஜெயலலிதா வென்ற ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. இந்நிலையில் நேற்று இடைத் தேர்தலுக்கான தேதியை தலைமைத் தேர்தல் தேர்தல் ஆணையர் வி.எஸ். சம்பத் நேற்று அறிவித்தார். அதன்படி பிப்ரவரி 13ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.
வேட்பு மனுத் தாக்கல் ஜனவரி 19ம் தேதி தொடங்குகிறது. மனுத்தாக்கல் செய்ய கடைசி நாள் ஜனவரி 27ம் தேதியாகும். மனுக்கள் ஜனவரி 28ம் தேதி பரிசீலிக்கப்பட்டு, வாபஸ் பெற ஜனவரி 30ம் தேதி கடைசி நாளாகும். வாக்குப் பதிவு பிப்ரவரி 13ம் தேதி நடைபெறும். வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 16ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாக்கப்பட்டு வந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் 750 இயந்திரங்கள் ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தலுக்காக இன்று பலத்த பாதுகாப்புடன் எடுத்துச்செல்லப்பட்டது.