இன்று... 8 நகரங்களில் சதம் போட்ட வெயில்.. ஈரோட்டில் 104!
சென்னை: தமிழகத்தில் தொடர்ந்து வெயில் வெளுத்தெடுத்து வருகிறது. மாநிலத்திலேயே அதிகபட்சமாக ஈரோட்டில் 104 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு வெப்ப நிலை பதிவானது.
வெயில் காரணமாக மக்கள் வெளியில் தலை காட்ட முடியாமல் தவிப்புக்குள்ளாகியுள்ளனர். தமிழகத்தில் இன்று 8 நகரங்களில் வெயில் 100 டிகிரியைத் தொட்டது மற்றும் தாண்டிது.

அதிக அளவாக ஈரோட்டில் 104 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. ஈரோடு நகர மக்கள் இந்த கடும் வெயிலால் பெரும் தவிப்புக்குள்ளாகினர். அடிக்கும் வெயிலைப் பார்த்தால் 110 டிகிரி அளவுக்கு இருக்கும் என்று கூறும் அளவுக்கு வெப்பம் தகிக்கிறது.
அதேபோல திருச்சியில் 103, திண்டுக்கல்லில் 102, சேலத்தில் 101, திருப்பூரில் 101, மதுரை, கோவை, வேலூர் ஆகிய நகரங்களில் தலா 100 டிகிரி அளவுக்கு வெயில் பதிவாகியுள்ளது.
சென்னையில் 95 டிகிரி அளவில்தான் வெப்ப நிலை பதிவாகியுள்ளது. ஆனால் அடிக்கும் வெயிலைப் பார்த்தால் 105 டிகிரி என்று சொல்லும் அளவுக்கு சுட்டெரிக்கிறது. வெளியில் தலை காட்ட முடியவில்லை. அவ்வப்போது இதமான காற்று வீசுகிறது.
நெல்லை, தூத்துக்குடி, தஞ்சாவூர் உள்ளிட்ட நகரங்களில் 100 டிகிரிக்கும் கீழே வெயில் இருந்தாலும் கூட சுட்டெரிக்கிறது வெப்பம்.












Click it and Unblock the Notifications