அதிமுகவில் இருந்து சசிகலாவை நீக்கினால் 8 அமைச்சர்கள் ராஜினாமா?
அதிமுகவில் இருந்து சசிகலாவை நீக்கினால் எதிர்ப்பு தெரிவித்து 8 அமைச்சர்கள் ராஜினாமா செய்வார்கள் என கூறப்படுகிறது.
சென்னை: அ.தி.மு.கவில் இருந்து சசிகலாவை நீக்கினால் எதிர்ப்புத் தெரிவித்து 8 அமைச்சர்கள் ராஜினாமா செய்யக் கூடும் என கூறப்படுகிறது.
அ.தி.மு.க பொதுக்குழுவை செப்டம்பர் 12-ந் தேதி நடத்த இருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. இந்த பொதுக்குழு கூட்டத்துக்கு எதிராகக் கண்டன அறிக்கையை வெளியிட்டிருக்கிறார் தினகரன்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய தினகரன் ஆதரவாளர்கள், எங்களைத் தேடி வந்து நேரடியாக ஆதரவு கொடுத்த எம்.எல்.ஏக்கள் 19 பேர் உள்ளனர். இவர்களைத் தவிர, கூட்டணிக் கட்சி எம்.எல்.ஏக்கள் மூன்று பேரின் ஆதரவும் எங்களுக்குத்தான் உள்ளது.

ஆதரவு அதிகரிக்கும்
மைனாரிட்டி அரசின் முதல்வராகத்தான் எடப்பாடி தொடர்ந்து கொண்டிருக்கிறார். நேரடி ஆதரவாளர்களைத் தவிர, தினகரன் குறிப்பிட்ட ஸ்லீப்பர் செல் எம்.எல்.ஏக்கள் மற்றும் அமைச்சர்கள் உள்ளனர். சசிகலா குடும்பத்துக்கு நெருக்கமான அமைச்சர்கள், தினகரனுக்கு எதிராகப் பேசவிட்டாலும், ஒருகட்டத்தில் அவர்கள் அனைவரும் எங்களிடம் வந்துவிடுவார்கள்.

எடப்பாடி தரப்பு நிலை
இவர்கள் யாரும் சசிகலாவை நீக்குவதை துளியும் ஏற்க மாட்டார்கள். சசிகலாவைத் தவிர அந்தக் குடும்பத்தில் யாரும் வரக் கூடாது எனத் தீர்மானம் போட்டால் வரவேற்பார்கள். இந்த உண்மையை எடப்பாடி பழனிச்சாமியும் உணர்ந்து வைத்திருக்கிறார் என்கின்றனர்.

8 அமைச்சர்கள் ராஜினாமா
அத்துடன் சசிகலாவை நீக்குவதாக அறிவித்தால் நிச்சயம் 8 அமைச்சர்கள் உடனே பதவியை ராஜினாமா செய்வார்கள். அவர்கள் ஆதரவு எம்.எல்.ஏக்களும் ராஜினாமா செய்துவிடுவார்கள் என்கின்றன அதிமுக வட்டாரங்கள்.

டெல்லி உறுதுணை
அதே நேரத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரின் விருப்பத்தோடு, சசிகலா குடும்பத்தை ஒதுக்கி வைக்கும் வேலைகள் வேகமெடுத்துள்ளன. அனைத்தையும் டெல்லி உதவியுடன் சமாளிப்போம் என்ற தெம்பில்தான் எடப்பாடி அணி வலம் வருகிறதாம்.












Click it and Unblock the Notifications