சென்னை பங்களாக்களில் விபசாரம்: 35 பெண்கள் மீட்பு- 8 புரோக்கர்கள் கைது
சென்னை: சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள ஆடம்பர பங்களாக்களில் பெண்களை அடைத்து வைத்து விபசாரம் செய்து வந்த புரோக்கர்களை கைது செய்த போலீசார், அங்கிருந்த 35 பெண்களை மீட்டுள்ளனர்.
ஆந்திராவைச் சேர்ந்த பிரபல விபசார தாதா சிவராம்குமார் என்ற ராஜி (வயது 38) என்பவர், சென்னையில் பல இடங்களில், பங்களா வீடுகளை வாடகைக்கு எடுத்து விபசார தொழிலை நடத்தி வந்தாக புகார் வந்தது.
இவரை கைது செய்யுமாறு கமிஷனர் ஜார்ஜ் உத்தரவிட்டார். இதையடுத்து கூடுதல் கமிஷனர் நல்லசிவம், துணை கமிஷனர் ஜெயக்குமார் ஆகியோர் மேற்பார்வையில், தனிப்படை போலீசார் கடந்த சில நாட்களாக சென்னை புறநகர் பகுதிகளான வேளச்சேரி, தாம்பரம், தாழம்பூர், தையூர் ஆகிய இடங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
போலீசாரின் இந்த சோதனை வேட்டையில் சிவராம்குமார், அவரது கூட்டாளிகள் எத்திராஜூலு, தாராசிங், நாகராஜ், இளையராஜா, வெங்கட்நாராயணன், சுப்பாராவ், முத்தையா, ரவி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களால் விபசார தொழிலுக்காக பங்களா வீடுகளில் அடைத்து வைத்திருந்த 35 அழகிகள் மீட்கப்பட்டனர்.
வாடிக்கையாளர்களை அழைத்து வருவதற்காக அவர்களிடம் இருந்த 6 சொகுசு கார்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த விபசார கும்பலை கூண்டோடு கைது செய்த, தனிப்படை போலீசாரை, கமிஷனர் ஜார்ஜ் பாராட்டினார்.