மாணவி தற்கொலை.. பலாத்காரம் செய்த 80 வயது முதியவருக்கு 10 ஆண்டு ஜெயில் - திருப்பூர் கோர்ட் தீர்ப்பு!
திருப்பூர்: திருப்பூரில் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் அப்பெண்ணை பலாத்காரம் செய்த 80 வயது முதியவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி திருப்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவிலில் உள்ள நடேசன் நகர் பகுதியை சேர்ந்தவர் ஞானசிகாமணி. இவர் அதே பகுதியில் மளிகைக்கடை நடத்தி வருகிறார். அதே பகுதியில் அரசு பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வந்த ஒரு மாணவி வசித்து வந்தார். அவர் அடிக்கடி மளிகைக்கடைக்கு சென்று பொருட்கள் வாங்கி வருவது வழக்கம்.
கடந்த 2013 ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையையொட்டி பள்ளி விடுமுறையின் போது அந்த மாணவி மளிகைக்கடைக்கு சென்றுள்ளார். அப்போது, அந்த மாணவியை ஞானசிகாமணி வலுக்கட்டாயமாக கடைக்குள் இழுத்துச்சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. மேலும் இந்த சம்பவத்தை வெளியே சொன்னால் உன்னை கொலை செய்துவிடுவேன் என்றும் அவர் மிரட்டியுள்ளார்.
அதற்கு பயந்த மாணவி இதுகுறித்து யாரிடமும் சொல்லாமல் இருந்துள்ளார். அதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட ஞானசிகாமணி அந்த மாணவியை பலமுறை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்த நிலையில் அந்த மாணவியின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த அவருடைய தாயார், மாணவியிடம் விசாரித்துள்ளார்.
உடனே மாணவி தனக்கு நடந்த விஷயத்தை தனது தாயாரிடம் கூறி அழுதுள்ளார். பின்னர் அவமானம் அடைந்த அந்த மாணவி, பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்ததும் வீட்டில் இருந்த மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் வெள்ளகோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய மளிகைக்கடை உரிமையாளர் ஞானசிகாமணியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இது தொடர்பான வழக்கு திருப்பூர் மாவட்ட மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் சாட்சி விசாரணைகள் முடிந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அப்போது குற்றம் சாட்டப்பட்ட ஞானசிகாமணிக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூபாய் 50 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி வசந்தலீலா தீர்ப்பு கூறினார். மேலும், அபராத தொகையை பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோரிடம் வழங்கவும் அவர் உத்தரவிட்டார். இதை தொடர்ந்து போலீசார் ஞானசிகாமணியை பலத்த பாதுகாப்புடன் கோவைக்கு அழைத்து சென்று மத்திய சிறையில் அடைத்தனர்.