சென்னையில் இருந்து 9,088 தீபாவளி சிறப்பு பேருந்துகள்: இணையதளம் மூலம் முன்பதிவு
ென்னை: தீபாவளிப் பண்டிகைக்காக, அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் சார்பில் சென்னையில் இருந்து 9,088 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: "கடந்த மூன்று ஆண்டுகளாக அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் சார்பில் சிறப்புப் பேருந்துகள் சீரிய முறையில் இயக்கப்பட்டு, மக்களிடையே பெரும் வரவேற்பினைப் பெற்றது.
மக்கள் நலம் பயக்கும் இந்தத் திட்டத்தை இந்த ஆண்டும் செயல்படுத்துவது குறித்து ஓர் ஆய்வுக் கூட்டம் இன்று (11.10.2014) தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.
இதன்படி,பொதுமக்கள் தீபாவளித் திருநாளை தங்கள் சொந்த ஊர்களில் மகிழ்ச்சியுடன் கொண்டாட வழிவகுக்கும் வகையில் சிறப்பு பேருந்துகள் இந்த ஆண்டும் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் சிறப்பு பேருந்துகள்
அனைத்து மாவட்ட தலைநகரங்கள் மற்றும் மாநிலத்தின் முக்கிய ஊர்களுக்கு கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்திலிருந்து 17.10.2014 அன்று 501 சிறப்புப் பேருந்துகள், 18.10.2014 அன்று 501 சிறப்புப் பேருந்துகள், 19.10.2014 அன்று 699 சிறப்புப் பேருந்துகள், 20.10.2014 அன்று 1,400 சிறப்புப் பேருந்துகள், 21.10.2014 அன்று 1,652 சிறப்புப் பேருந்துகள் என 17.10.2014 முதல் 21.10.2014 வரை மொத்தம் 4,753 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.
பிற மாவட்டங்களில்
சென்னையைத் தவிர்த்து மாநிலத்தின் எஞ்சிய இடங்களிலிருந்து 17.10.2014 அன்று 499 சிறப்புப் பேருந்துகள், 18.10.2014 அன்று 601 சிறப்புப் பேருந்துகள், 19.10.2014 அன்று 700 சிறப்புப் பேருந்துகள், 20.10.2014 அன்று 1,234 சிறப்புப் பேருந்துகள், 21.10.2014 அன்று 1,301 சிறப்புப் பேருந்துகள் என 17.10.2014 முதல் 21.10.2014 வரை 4,335 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.
5 நாட்களுக்கு பேருந்து வசதி
மொத்தத்தில், 17.10.2014 முதல் 21.10.2014 வரை 9,088 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.
ஊர் திரும்ப வசதி
இதேபோன்று, தீபாவளி பண்டிகை முடிந்த பின்பு, பொதுமக்கள் மீண்டும் ஊர் திரும்பும் வண்ணம் இதே அளவிலான பேருந்துகள் 22.10.2014 முதல் 26.10.2014 வரை இயக்கப்படும்.
சென்னை மாநகரில்
இது தவிர, மேற்காணும் நாட்களில் சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் 200 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.
இணையதளம் முன்பதிவு
கடந்த ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்டதுபோல், 300 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேல் செல்லும் சிறப்புப் பேருந்துகளில் பயணிக்க விரும்புவோர் www.tnstc.in என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும், கணினி மூலம் உடனடி தள முன்பதிவு செய்யும் வகையில், சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 25 சிறப்பு முன்பதிவு மையங்கள் ஏற்படுத்தப்படும்.
தொலைபேசி எண்
தீபாவளிப் பண்டிகையையொட்டி, ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டால், அது குறித்து சென்னை, கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் உள்ள அரசு விரைவு போக்குவரத்துக் கழக அலுவலக தொலைபேசி எண் 24794709-க்கு பொதுமக்கள் புகார் தெரிவிக்க ஏற்பாடுகள் செய்யப்படும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.