வெற்றி பெற்று டெல்லி செல்வாரா தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத் தலைவர்...
கடலூர்: கடலூர் லோக்சபா தொகுதி அதிமுக வேட்பாளராக ஆ.அருண்மொழித்தேவன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
திட்டக்குடி அருகேயுள்ள கீழ்ஆதனூர் கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் - கல்யாணி தம்பதியினரின் மகனான அருண்மொழித்தேவன் (46) பி.எஸ்.சி, பி.எல். படித்துள்ளார். வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த அருண்மொழியின் மனைவி பெயர் பொற்செல்வி, மகன்கள் பெயர் முறையே அஜய் (9ஆம் வகுப்பு) மற்றும் சஞ்சய் (7ஆம் வகுப்பு).
கடந்த 1991ம் ஆண்டு சேலம் சட்டக் கல்லூரியில் அதிமுக மாணவரணி நிர்வாகியாக தனது அரசியல் வாழ்க்கையைத் துவக்கிய அருண்மொழி, அடஹ்ன் தொடர்ச்சியாக கீழ்ஆதனூர் கிளைச் செயலர், ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர், மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலர் போன்ற பதவிகளையும் வகித்தார்.
கடந்த 2004-ல் கடலூர் மேற்கு மாவட்டச் செயலர் ஆனவர், அதே ஆண்டில் திண்டிவனம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார். 2012ம் ஆண்டு மாவட்டச் செயலர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்ட அருண்மொழி, 2013-ல் மீண்டும் மாவட்டச் செயலர், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத் தலைவரானார்.