ஆல் தி ரஜினி ஃபேன்ஸ்... நவம்பர் அல்லது டிசம்பரில் அம்பை எய்துகிறாராம் ரஜினி!.. ஏ.சி.எஸ். தகவல்
சென்னை: ரஜினிகாந்த் வரும் நவம்பர் அல்லது டிசம்பர் மாதம் அரசியல் கட்சியை தொடங்குகிறார் என்று அவரது நண்பர் ஏ.சி. சண்முகம் தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்த் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31-ஆம் தேதி அரசியலுக்கு வருவது உறுதி என்றும் கண்ணா எல்லாம் ரெடி.. இன்னும் அம்பு எய்துவது மட்டுமே பாக்கி என்றும் தனக்கே உரிய ஸ்டைலில் பதில் அளித்தார்.
இந்நிலையில் அவர் ரஜினி மக்கள் மன்றம் என்ற அமைப்பை தொடங்கியதை பார்த்த போது உடனடியாக கட்சியை தொடங்கிவிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. எனினும் அவர் இன்னும் நேரம் வரவில்லை என்றே கூறி வருகிறார்.
வெறுப்பு
நாடாளுமன்றத் தேர்தலிலாவது போட்டியிடுவீரா என்ற கேள்விக்கு அதற்கு இன்னும் டைம் இருக்கிறது என்று பதிலளித்தார். இந்நிலையில் செப்டம்பர் 2-ஆவது வாரம் கட்சியை தொடங்குவார் என்று எதிர்பார்த்து ரசிகர்களே வெறுப்படையும் நிலை ஏற்பட்டது.
நவம்பரில்
இந்நிலையில் கட்சி தொடங்குவது குறித்து கல்வியாளரும் ரஜினியின் நண்பருமான ஏ.சி. சண்முகம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார், அப்போது அவர் கூறுகையில் வெளிநாட்டுக்கு படப்பிடிப்புக்கு செல்வதற்கு முன்பு நான் ரஜினியை சந்தித்தேன். அப்போது ரஜினி மக்கள் மன்றம் தொடர்பான அனைத்து பணிகளும் நிறைவு பெற்றுவிட்டன என்று கூறினார். எனவே நவம்பர் அல்லது டிசம்பரில் கட்சி தொடங்குகிறார் ரஜினிகாந்த்.
அரசியல் மாற்றம்
ரஜினி மக்கள் மன்ற பணிகளை முடுக்கிவிட்டுள்ளார். அடுத்த மாதம் ஒரு வார தொடர் நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கின்றன. மிகப்பெரிய அரசியல் மாற்றத்தை ரஜினி கொண்டு வருவார் என்றார்.
நெட்டிசன்கள் கிண்டல்
எல்லாம் சரி, இதை அறிவிக்க ஏ.சி. சண்முகம் யார் என தெரியவில்லை, கட்சியில் ஏதாவது முக்கிய பதவி வகிக்கிறாரா என்பது தெரியவில்லை. இவர் அறிவித்தது தான் தாமதம் சார் எந்த நவம்பர், எந்த டிசம்பர் என்று கேட்டு சொல்லுங்கள் என சமூகவலைதளங்களில் நெட்டிசன்கள் கிண்டல் செய்ய ஆரம்பித்துவிட்டனர்.