வடிவேலுவை போல் வேறு பேருந்தில் ஏறி சென்ற நடத்துநரால் எழுந்தது சிரிப்பலை!
சேலம்: வடிவேலு படத்தில் வரும் காமெடி காட்சியை போல் சிதம்பரத்தில் இருந்து ஆத்தூர் செல்லும் பேருந்தின் கண்டக்டர் குழப்பத்தால் வேறு பேருந்தில் ஏறி சென்றார். இதனால் சிரிப்பலை எழுந்தது.
சிதம்பரத்திலிருந்து ஆத்தூர் பேருந்து நிலையத்துக்கு அரசு பேருந்து ஒன்று வந்தது. அப்போது அந்த பேருந்தின் நடத்துநர், அலுவலகத்துக்கு சென்று கையெழுத்திட சென்றார்.
பின்னர் திரும்பி வந்து பார்த்த போது அங்கு ஒரே நிறத்தில் 2, 3 பேருந்துகள் நின்றிருந்ததால் குழப்பம் அடைந்த அவர் வேறு பேருந்தில் ஏறிச் சென்றுவிட்டார். இதனிடையே சிதம்பரத்தில் இருந்து வந்த பேருந்தின் டிரைவர், அதன் நடத்துநர் ஒரு மணி நேரம் ஆகியும் அலுவலகத்தை விட்டு வராதது குறித்து அவருக்கு போன் செய்தார்.
அப்போதுதான் அவர் மாற்று பேருந்தில் சென்றுவிட்டது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அந்த பேருந்தில் வந்த பயணிகளுக்கு மாற்று பேருந்து ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டு அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.
இதை பார்ப்பதற்கு வடிவேல் படக் காமெடி போல் இருந்தது. ஏபிசிடி என்ற திரைப்படத்தில் பஸ் கண்டக்டராக நடித்த வடிவேல் வேறு பேருந்தில் ஏறி சென்று அங்கு அமர்ந்திருக்கும் பயணிகளிடம் வம்பு செய்து அடிவாங்கும் காட்சிகள் கண் முன் தெரிகின்றன.