சுனாமி கடத்திச் சென்ற 8 வயது மகள்... 10 வருடமாக கண்ணீருடன் தேடிக் கொண்டிருக்கும் அப்பா!
வேளாங்கண்ணி: சுனாமியில் காணாமல் போன மகள், நிச்சயம் ஒரு நாள் கிடைப்பார் என நம்பிக்கையுடன் தொடர்ந்து பத்து ஆண்டுகளாக தேடி வரும் ஒரு தந்தையின் பாசம் பார்ப்பவர்களின் கண்களில் நீரை வரவழைக்கிறது.
குஜராத் மாநிலம் பூஜ் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரவி சங்கர் (44). இந்திய விமானப்படை அதிகாரியான சங்கர் சுனாமி ஏற்பட்ட சமயத்தில் கார் நிக்கோபர் தீவில் தனது மனைவி மற்றும் அபூர்வா (8), அருண் (1) என இரண்டு குழந்தைகளுடன் குடும்பமாக இருந்துள்ளார்.

என்ன நடக்கிறது என யூகிப்பதற்கு முன்னதாகவே சுனாமி அலை அவர்களது குடும்பத்தைப் பிரித்தது. அலையில் சிக்கி சிறிது நேரம் கழித்து தான் இன்னும் உயிரோடு தான் இருக்கிறோம் என்ற நிதானத்திற்கு சங்கர் வந்தபோது, அவரது மனைவி இடுப்பில் மகனை வைத்தபடி நண்பர் ஒருவரால் காப்பாற்றப் பட்டு அழைத்து வரப்பட்டார். ஆனாலும், அச்சிறுவன் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்து விட்டனர்.
அன்றிலிருந்து தனது மகள் அபூர்வாவைத் தேடும் பணியைத் தொடங்கி உள்ளார் சங்கர். நிவாரண முகாம்களில் விசாரித்த போது, அங்கு அபூர்வா இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்ததால் சங்கருக்கு நம்பிக்கை உண்டானது.
பெற்றோரை இழந்து வாடிய அபூர்வாவை யாரோ தத்தெடுத்து சென்றிருக்க வேண்டும் என நம்புகிறார் சங்கர். அதனை மெய்ப்பிப்பது போல, கோலார் பகுதியில் அபூர்வா வசிப்பதாக அவருக்கு தகவல் கிடைத்துள்ளது. ஆனால், அபூர்வாவை அவரால் சந்திக்க இயலவில்லை.
ஆனபோதும், தொடர்ந்து தனது நம்பிக்கையை இழக்காத சங்கர், ஆண்டுதோறும் சுனாமி நினைவு நாள் சமயங்களில் வேளாங்கண்ணி பகுதிக்கு தனது மகள் அபூர்வாவின் புகைப்படத்தோடு சென்று விடுகிறார். அங்கே எதிர்ப்படுபவர்களிடம் எல்லாம் அபூர்வாவின் புகைப்படத்தைக் காட்டி விசாரிக்கிறார்.
10 ஆண்டுகள் ஆனபோதும், எப்படியும் தன் மகள் மீண்டும் கிடைப்பாள் என்ற நம்பிக்கையுடன் போராடி வருகிறார் சங்கர். அவரது நம்பிக்கை மெய்ப்பட நாமும் பிரார்த்தித்துக் கொள்வோம்.












Click it and Unblock the Notifications