போதையில் தாயுடன் தகராறு... தட்டிக்கேட்ட மகனை தண்ணீரில் மூழ்கடித்துக் கொன்ற குடிகார தந்தை
ஈரோடு அருகே குடிபோதையில் தாயுடன் தகராறில் ஈடுபட்ட தந்தையை தட்டிக்கேட்ட மகன் கொலை செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஈரோடு: ஈரோடு அருகே குடிபோதையில் தாயுடன் தகராறில் ஈடுபட்ட வந்த தந்தையை தட்டிக்கேட்ட 15 வயது மகன் கொடூமாக கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் குமலன்குட்டை செல்வம் நகரை சேர்ந்த ரமேஷ்குமார் என்பவருக்கு ரேவதி என்ற மனைவியும், சரண் என்ற மகனும் உள்ளனர். ரேவதி தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். சரண் அங்குள்ள பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில் குடிப்பழக்கத்துக்கு அடிமையான ரமேஷ் குமார் சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார். அவ்வப்போது குடிக்க பணம் கேட்டு ரேவதியிடம் ரமேஷ்குமார் தகராறிலும் ஈடுபட்டு வந்துள்ளார்.
தாய்க்கு ஆதரவாக இருந்த மகன்
இதனால் கணவன் மனைவியிடையே அடிக்கடி சண்டை நடந்துவந்துள்ளது. இதனால் வேதனையடைந்த அவர்களது 15 வயது மகன் சரண் தாய்க்கு ஆதரவாக இருந்ததோடு தந்தையைத் தட்டிக்கேட்டுள்ளார்.
தூக்க மாத்திரைகளை கொடுத்த தந்தை
இதனால் ஆத்திரமடைந்த ரமேஷ்குமார் மகனை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்துள்ளார். அதன்படி நேற்று முன்தினம் தூக்க மாத்திரிகளை வாங்கி வந்த அவர் மனைவி வீட்டில் இல்லாத நேரத்தில் அதனை மகனுக்கு கொடுத்துள்ளார்.
தண்ணீரை திறந்துவிட்டு கொலை
மாத்திரைகளை விழுங்கிய மகன் தூக்கத்தில் இருக்கும் போது அவரை குளியல் அறையில் தூக்கிச்சென்று ரமேஷ்குமார் போட்டுள்ளார். பின்னர் தண்ணீரை திறந்துவிட்டு தானும் குளியல் அறையிலேயே படுத்துள்ளார்.
அதிர்ச்சியடைந்த தாய்
வீட்டில் நீண்ட நேரமாக தண்ணீர் வெளியேறிக் கொண்டிருப்பதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் ரேவதிக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து வீட்டிற்கு வந்த ரேவதி தந்தையும் மகனும் குளியலறையில் மயங்கிய நிலையில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
சரண் இறந்ததை உறுதியாக்கிய மருத்துவர்கள்
அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கணவனையும் மகனையும் ரேவதி மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு மகன் சரணை சோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
மூக்கில் தண்ணீர் ஏறி பலி
மயங்கிய நிலையில் இருந்த ரமேஷ்குமாருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டது. குளியல் அறையில் அரை அடிக்கும் மேலாக தண்ணீர் நின்றதால் சரண் மூக்கில் தண்ணீர் ஏறி மூச்சு திணறி உயிரிழந்துள்ளார் என தெரியவந்துள்ளது.
உயிர்தப்பிய குடிகார தந்தை
ரமேஷ்குமாரின் உயரம் அதிகம் என்பதால் அவரின் மூக்கில் தண்ணீர் புகவில்லை. இதனால் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதையடுத்து போலீஸ் விசாரணையில் மகனை கொன்றதை ரமேஷ்குமார் ஒப்புக்கொண்டார். அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.