எனக்கு மயக்க மருந்து கொடுங்க...கிழிஞ்சி போன என் பேண்ட்டை தைங்க...மருத்துவமனையில் போதை ஆசாமி அலப்பறை
திருப்பூர் தாராபுரம் சாலையில் உள்ள அரசு மருத்துவமனையில் போதை ஆசாமி ஒருவர் உள்ளே சென்று கிழிந்த தனது பேண்டை தைத்து தருமாறு கலாட்டா செய்தார்.
Recommended Video
திருப்பூர்: திருப்பூரில் போதை தலைக்கேறிய நிலையில் அரசு மருத்துவமனைக்கு சென்ற ஆசாமி ஒருவர் தனது கிழிந்த பேண்டை தைத்து தருமாறு கலாட்டா செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர் தாராபுரம் சாலையில் உள்ள அரசு தலைமை மருத்துவமனை. இங்கு உள் மற்றும் வெளி நோயாளிகள் ஏராளமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்ட எல்லையில் உள்ளதால் விபத்தில் சிக்கியவர்களும் இங்கு கொண்டு வரப்படுவதால் அவசர சிகிச்சை பிரிவு எப்போதும் பரபரப்பாகவே இயங்கி வரும்.
நேற்று இந்த மருத்துவமனையில் 50 வயது மதிக்கத்தக்க ஒரு முதியவர் ஒருவர் கிழிந்த பேண்டுடன் கிட்டதட்ட அரைக்கால் சட்டை போல் அணிந்து கொண்டு அவசர சிகிச்சை பிரிவுக்கு வந்தார். அவரை பார்த்த மருத்துவர்களும். செவிலியர்களும் விபத்தில் சிக்கியதாக பதறினர்.
நோயாளியிடம் விசாரணை
அவர் ஏதோ விபத்தில் சிக்கியிருக்கலாம் என்ற பதற்றத்தில் சிகிச்சை அளிக்க ஏற்பாடுகளை செய்தனர். அப்போது அவரிடம் சென்று என்னவாயிற்று. எங்கு விபத்து நடந்தது என்று கேட்டனர்.
பேண்ட் தையுங்க
அப்போது குடிபோதையில் இருந்த அந்த ஆசாமி எனக்கு உடனடியாக மயக்க மருந்து கொடுங்கள். பின்னர் எனது கிழிந்த பேண்டை தைத்து கொடுங்க என்றார். இதையே திரும்ப திரும்ப அவர் கூறியதால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து போதையில் உளறுகிறார் என்பதை அறிந்த செவிலியிர்கள் வெளியே போகுமாறு கூறினர். எனினும் அவர் போக மறுத்து சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லினார்.
108 ஆம்புலன்ஸில்
பின்னர் நைசாக பேசி அவரை அங்கிருந்து வெளியே அனுப்பினார்கள். இதையடுத்து வெளியே சென்ற அந்த நபர், கூச்சல் போட்டார். அப்போது அங்கு 108 ஆம்புலன்ஸ் வந்து நின்றது. இந்த ஆம்புலன்சை பார்த்த அந்த நபர், ஆம்புலன்ஸ் அடியில் படுத்துக்கொண்டார். கிழிந்த பேண்டை தைத்தால்தான் போவேன் என அடம் பிடித்தார். அவருடைய தொல்லை தாங்க முடியாத ஆம்புலன்ஸ் டிரைவர்கள், அங்கு சாதாரண உடையில் வந்த போலீஸ்காரரிடம் நடந்ததை கூறினார்கள்.
நைசாக பேசி அனுப்பிவைப்பு
அந்த போலீஸ்காரர், மதுபோதையில் இருந்த நபரை, மோட்டார் சைக்கிளில் ஏற்றி, வேறு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று கிழிந்த பேண்டை தைத்து தருவதாக நைசாக பேசி, அங்கிருந்து அழைத்து சென்றார். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் நகைச்சுவை உணர்வையும் ஏற்படுத்தியது. அத்துடன் மதுவால் மனிதனின் மூளை எந்த அளவுக்கு மங்குகிறது என்பதை இந்த சம்பவம் வெளிப்படுத்துகிறது.